சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

11. திருமுகத்தலை


113.


 

புழுங்குதீ வினையேன் வினைகெடப் புகுந்து
   புணர்பொரு ளுணர்வுநூல் வகையால்
வழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்
   வளரொளி மணிநெடுங் குன்றே !

முழங்குதீம் புனல்பாய்ந் திளவரால் உகளும்
   முகத்தலை யகத்தமர்ந் தடியேன்
விழுங்குதீங் கனியாய் இனியஆ னந்த
   வெள்ளமாய் உள்ளமா யினையே.               (2)
 

113,     புழுங்குதல்-வேதல்  ‘‘புழுங்கு’’  என்றது,  ‘‘வினையேன்’’
என்பதன்   இறுதிநிலையோடு   முடியும்.   ‘‘புழுங்கு  தீவினையேள்’’
என்றது,    ‘தீவினையால்     புழுங்குவேன்’         என்றவாறாம்.
புகுந்து -  எதிர்    வந்து.    புணர்      பொருள்      உணர்வு
நூல்     வகையால்-அடையத்தக்க  மெய்ப்பொருளை       உணரும்
உணர்வைத்  தருகின்ற  நூன்முறை  வாயிலாக  வழங்கு   தேன்-உன்
அடியார்க்கு  நீ  வழங்குகின்ற  திருவருளாகிய  தேனை, ‘‘பொழியும்’’
என்றது  இறந்தகாலத்தில்  நிகழ்காலம். இதனால், இவர்க்கு  இறைவன்
ஆசிரியனாய்  வந்து  அருள்  புரிந்தமை பெறப்படும்.  (ஒளிக் குன்று)
என  இயையும்.  மணிக்  குன்று-மாணிக்க  மலை.   ‘உள்ளமும்’ என
உம்மை   விரித்து,   ‘முகத்தலை   அமர்ந்து,  எனதும்  உள்ளத்தும்
ஆயினை’  என  உரைக்க.  ஆயினை-பொருந்தினாய்.  ‘இதற்கு யான்
செய்யும் கைம்மாறு என்’ எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.


மேல்