8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
27. கோயில்
277. | நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாம்என்று மாற்காழி ஈந்து மலரோனை நிந்தித்துச் சேக்கா தலித்தேறுந் தில்லைச்சிற் றம்பலவர் ஊர்க்கேவந் தென்வளைகள் கொள்வாரோ ஒண்ணுதலீர்! (10) |
277, ‘‘மாற்கு ஆழி ஈந்து’’ என்பதை, ‘‘நிந்தித்து‘‘ என்பதன் பின்னர்க் கூட்டுக. நோக்காத தன்மையால்-நீ எம்மை முதற்கடவுள் என்று மதித்தலைச் செய்யாத காரணத்தால். யாம் நோக்கிலோம் என்று- நாம் உன்னை நம் அடியவருள் ஒருவனாகக் கருதி இரங்கிலோம் என்று சொல்லி. மலரோன்-பிரமன். அவனை நிந்தித்தமை. அவனது நடுத்தலையை உகிரால் அறுத்தமை. ‘திருமாலுக்கு ஆழி (சக்கரம்) ஈந்ததும், அறக் கடவுளை ஊர்தியாகக் கொண்டதும் அவர்களது வழிபாட்டினால்’ என்பது பிரமனுக்குக் கூறிய குறிப்புப் பற்றி வருவித்துக்கொள்ளப்படும். ஊர்க்கே வந்து - ஊரினுள் தானே வந்து, ‘வழிபடுபவர்க்கு அளியும், வழிபடாதோர்க்குத் தெறலும் செய்கின்ற இவர் வழிபாடுடைய என்மாட்டுத் தெறலைச் செய்கின்றது என்றோ’ என்பதாம். |