2. சேந்தனார் திருவிசைப்பா
5. திருவீழிமிழலை
53. | ஆயிரங் கமலம்ஞாயிறா யிரமுக் கண்முக கரசர ணத்தோன், பாயிருங் கங்கை பனிநிலாக் கரந்த படர்சடை மின்னுபொன் முடியோன், வேயிருந் தோளி உமைமண வாளன் விரும்பிய மிழலைசூழ் பொழிலைப் போயிருந் தேயும் போற்றுவார் கழல்கள் போற்றுவார் புரந்தரா திகளே. (8) |
53. கண் முதலியவற்றை எதிர்நிரனிறையாக்கி, கண் ஒன்றற்கும் ஞாயிற்றை உவமையாகவும், ஏனையவற்றிற்குக் கமலத்தை உவமையாகவும் கொள்க. கண்களை, ‘‘ஆயிர ஞாயிறு’’ என்றது ஒளிமிகுதி பற்றி. கரம்-கை. சரணம்-பாதம். பாய் இருங் கங்கை-பாய்ந்தோடுகின்ற பெரிய கங்கை. பனி- குளிர்ச்சி. கரந்த-மறைத்த. படர்-விரிந்த. சடையாகிய பொன்முடியோன்’ என்க. ‘‘போய்’’ என்றது, ‘அடைந்து’ என்றபடி. ‘திருவீழிமிழலைக் கோயிலை அடைந்து போற்றாவிடினும், அதனைச் சூழ்ந்துள்ள பொழிலை அடைந்தேனும் போற்றுவாரது கழல்களைப் போற்றுவார் புரந்தராதியர் ஆவர்’ என்றார், புரந்தரன்-இந்திரன். |