3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
11. திருமுகத்தலை
120.
| அம்பரா ! அனலா ! அனிலமே ! புவிநீ அம்புவே ! இந்துவே ! இரவி அம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்தஒண் சுடரே ! மொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர் முகத்தலை யகத்தமர்ந் தெனக்கே எம்பிரா னாகி ஆண்டநீ மீண்டே எந்தையும் தாயும்ஆ யினையே. (9) |
120, அம்பரன்-ஆகாயமாய் இருப்பவன். அனலன்-நெருப்பாய் இருப்பவன். அனிலம் முதலியன இங்ஙனம் அன்பெற்று வாராமையின், அவை ஆகுபெயர்களாம். அனிலம்-காற்று ஏனையபோல; ‘புவியே’ என்பதே பாடமாதல் வேண்டும். புவி-நிலம். அம்பு-நீர். இந்து-சந்திரன். ‘இரவீ’ என்பதே பாடம்போலும். இறைவனது அட்ட மூர்த்தங்களுள் இயமானன் ஒழித்து ஒழிந்த உருவங்களை எடுத்தோதி விளித்தார். ‘‘அணுவாய்’’ என்றது, ‘நுண்ணிய பொருளாய்’ என்றவாறு. மொய்ம்பு - வலிமை ; இங்கு, மன உறுதியை யுணர்த்திற்று. நலம் சொல் - உறுதியை உரைக்கின்ற. ‘‘மூதறிவாளர் முகத்தலை’’ என்றதில் தொக்குநின்ற ஆறாவது, ’யானையது காடு’ என்பதுபோல. வாழ்ச்சிக் கிழமைக்கண் வந்தது. ‘‘எம்பிரான்’’ என்றது, ‘இறைவன்’ என்னும் அளவாய் நின்றது. ‘‘மீண்டு’’ என்றது, ‘மற்றும்’ என்னும் பொருள் பட வந்தது. |