3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
14. திருப்பூவணம்
148. | கடுவினைப் பாசக் கடல்கடந் தைவர் கள்ளரை மெள்ளவே துரந்துன் அடியிணை இரண்டும் அடையுமா றடைந்தேன் அருள்செய்வாய் அருள்செயா தொழிவாய் ; நெடுநிலை மாடத் திரவிருள் கிழிக்க நிலைவிளக் கலகில்சா லேகப் புடைகிடந் திலங்கும் ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே. (5) |
148. வினையைக் கடலாக உருவகிக்கின்றவர், அதுதான் பாசங்களுள் ஒன்றாதலை விளக்குதற்கு, ‘‘வினைப் பாசக் கடல்’’ என்றார். ஐவர் கள்ளர்-ஐம்பொறிகள். ‘‘மெள்ள’’ என்றது, ‘இனிமையாகவே’ என்றவாறு. அவர் சென்றவழியே சென்று நீக்கினமை பற்றி இவ்வாறு கூறினார். இனி ‘சிறிது சிறிதாக நீக்கி’ என்றும் ஆம் துரந்து-ஓட்டி. அடையுமாறு அடைதலாவது, நூலிற்சொல்லப்பட்ட நெறிக்கண் நிற்கும் முறையானே அடைதல். இதனை, ‘விதி மார்க்கம்’ என்பர். ‘இனி நீ எனக்கு அருள் செய் ; அல்லது அருள்செய்யாதொழி ; அஃது உனது உள்ளத்தின்வழியது ; யான் செயற்பாலதனைச் செய்து விட்டேன் ; இந்நிலையினின்றும் வேறுபடேன்’ என்பதாம். ‘நெடுநிலை மாடத்து நிலைவிளக்குச் சாலேகப்புடை இலங்கும் வீதி’ என்க. இரவு-இரவின்கண். கிழிக்க-போக்குதற் பொருட்டு. நிலை விளக்கு-அணையாது உள்ள விளக்கு. சாலேகப்புடை-சாளரங்கட்கு வெளியே. இலங்கும்-ஒளியை வீசுகின்ற. |