6. வேணாட்டடிகள் திருவிசைப்பா
21. கோயில்
205. | துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆள்உகப்பார்? கைச்சாலும் சிறுகதலி இலைவேம்புங் கறிகொள்வார் எச்சார்வும் இல்லாமை நீஅறிந்தும் எனதுபணி நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. (1) |
205. துச்சான-இழிவான செயல்களை. ஆள் உகப்பார்- தமக்கு அடிமையாய் உள்ளவரை விரும்புகின்ற தலைவர். ‘கைத்தாலும்’ என்பது, ‘‘கைச்சாலும்’ எனப் போலியாயிற்று. கைத்தல்-கசத்தல். கதலி வாழை; இஃது ஆகுபெயராய் அதன் காயைக் குறித்தது. ‘‘இலை வேம்பு’’ என்றதனை, ‘வேம்பு இலை’ என மாற்றுக. ‘வாழையின் பிஞ்சுக் காயும், வேப்பிலையும் கசப்பனவாயினும் அவற்றையும் கறியாகக் கொள்வர் மக்கள்’ என்னும் இவ்வுவமையை முன்னர் வைத்து உரைக்க. எச்சார்வும்-யாதொரு துணையும். ‘எனக்கு இல்லாமை’ என உரைக்க. நச்சாய்-நீ விரும்பவில்லை. ‘இது பொருந்துவதோ’ என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. காண், முன்னிலையசை. |