சேந்தனார் திருப்பல்லாண்டு
29. கோயில்
297. | பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (9) |
297. பாலுக்கு-பாலை உண்பதற்கு. ‘‘பாலகன்’’ என்றது, உபமன்னிய முனிவரை. வேண்டி-விரும்பி. வியாக்கிரபாத முனிவர் மகனாராகிய உபமன்னிய முனிவர் பிள்ளைமைப் பருவத்தில் பால் பெறாது அழுது வருந்த, அவரை வியாக்கிரபாத முனிவர் கூத்தப் பெருமான் திருமுன்பிற் கிடத்துதலும், கூத்தப்பெருமான் அவருக்குப் பாற்கடலை அழைத்து அளித்த வரலாற்றைக் கோயிற்புராணத்துட் காண்க. சிவபெருமான் திருமால் செய்த வழிபாட்டிற்கு இரங்கிச் சக்கரம் அளித்த வரலாறு வெளிப்படை. ஆலிக்கும்-வேதத்தை ஓதுகின்ற. ஆலித்தல்-ஒலித்தல்; ‘‘அஞ்செவி நிறைய ஆலின’’ (முல்லைப்பாட்டு-89.) என்றது காண்க. வாழ்கின்ற-வாழ்தற்கு முதலாய் நிற்கின்ற. ‘‘சிற்றம்பலமே’’ என்ற ஏகாரம் பிரிநிலை. பாலித்து-அருளை வழங்கி. இது, ‘பாலியாநின்று’ என நிகழ்காலம் பற்றி நின்றது. |