34. ‘‘வேறாக உள்ளத்து உவகை விளைத்து’’ என்பதை’ ‘‘ஆளவல்லாய்’’ என்பதன் முன்னர்க் கூட்டுக. வேறாக - தனியாக; என்றது. ‘அந்தரங்க உரிமையாக’ என்றபடி. தன்னையும் மூவாயிரவரொடு படுத்து இவள் இவ்வாறு கூறியது, தனது காதல் மிகுதியாலாம். எனவே, இதனான் இவ்வாசிரியரது பேரன்பு விளங்குவதாம். அவனிச் சிவலோகம் - தில்லை, ‘அவனிச் சிவலோக மூவாயிரவர்’ என, இயையும். ‘தில்லை அவனிச் சிவலோகம்’ எனவே, அதன்கண் வாழும் மூவாயிரவர் அவனிச் சிவர் என்பது விளங்கும். இதனை ‘‘நீலத் தார்கரி யமிடற்றார்நல்ல நெற்றிமேல் உற்ற கண்ணீனார்பற்று-சூலத்தார்சுட லைப்பொடி நீறணி வார்சடையார் -சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலம்’’ (திருமுறை-3, 1, 3) என அருளிச்செய்தமையானும், அவ்வருளிச்செயலின் வரலாற்றாலும் (பெ. பு. ஞானசம்-168-174) நன்குணர்ந்து கொள்க. வேத வன்றி- வேதத்தை ஓதுதலானும், அதன்வழி வேட்டலானும் பெற்ற வெற்றி. ‘இவ்வெற்றி என்றும் மாறாது நிற்கும் மூவாயிரவர்’ என்க. ஆறு ஆர் சிகரம்- பல யாறுகள் பொருந்திய கொடுமுடி. பொருந்துதல், தோன்றுதல் இனி, ‘வான யாற்றை அளாவிய சிகரம்’ என்றலுமாம். ‘‘உன் அடியார் பிழை பொறுப்பாய்’’ என்றது தம்பாடலைப் பொறுக்கவேண்டுமென்னும் குறிப்பினது. இஃது ஒரு பெயர்த் தன்மைப்பட்டு, ‘‘மகேந்திரத்து’’ என்றதனை முடித்தது. அமுது-பெண்ணமுதாய மலைமகள். ‘மாதோர் கூறாய்’ என்பது பாடம் அன்று. |