3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
12. திரைலோக்கிய சுந்தரம்
123. | நையாத மனத்தினை நைவிப்பான் இத்தெருவே ஐயாநீ உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை கையாரத் தொழுதருவி கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள் ? கோடைத் திரைலோக்கிய [சுந்தரனே. (2) |
123. நையாத மனத்தினனை-வருந்தாது மகிழ்வுடன் இருந்த மனத்தையுடைய என்னை. நைவிப்பான்-வருத்துதற் பொருட்டு. இவ்வாறு கூறினாளாயினும், ‘ஒருவர் குறிப்பும் இன்றித் தன்னியல்பில் உண்டாயிற்று’ என்பதே கருத்தாம். ‘‘நையாத, நைவிப்பான்’’ என்றவற்றில், ‘நைதல்’ என்பது, காதற் பொருளில் இவ்வாறு, ‘வருந்துதல்’ குறித்ததாயினும், உண்மைப் பொருளில், ‘உருகுதல்’ என்னும் பொருளையே குறிக்கும். ‘அருள் செய்யாயோ‘ என மாற்றிக்கொள்க. இத்திருப்பாடலும் தலைவி கூற்று. |