சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

13. கங்கைகொண்ட சோளேச்சரம்


143.

மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை
   வளர்இளந் திங்களை முடிமேற்
கங்கையோ டணியுங் கடவுளைக் கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானை
அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர்
   அறைந்தசொல் மாலையால் ஆழிச்
செங்கையோ டுலகில் அரசுவீற் றிருந்து
   திளைப்பதும் சிவனருட் கடலே.                (11)

திருச்சிற்றம்பலம்
 


143.  யோகு-யோகம். ‘‘மங்கையோடு இருந்தே யோகம் செய்வான்’’
என்றது, ‘ஒன்றிலும் தோய்விலனாய், ஒன்றொடொன் றொவ்வா வேடம்
ஒருவனே   தரித்துக்கொண்டு   நிற்பான்’ (சிவஞான  சித்தி  சூ.1.51.)
என்றதாம்.    ‘‘நேரிழையைக்    கலந்திருந்தே   புலன்கள்  ஐந்தும்
வென்றானை’’     என்ற     அப்பர்     திருமொழியைக்   காண்க
(திருமுறை-6-50.3)  இவ்வாசிரியர்,  தம்மை, அங்கை ஓடு ஏந்திப் பலி
திரிபவராகக்  கூறினமையின்,  நிறைந்த  துறவர்  என்பது விளங்கும்.
ஆழி-ஆணைச்    சக்கரம்.   ‘திளைப்பதும்   சிவன்   அருட்கடல்’
என்றாராயினும்,   ‘சிவனது   அருட்கடலிலும்   திளைப்பர்  என்றல்
கருத்தென்க.    ‘அரசு    வீற்றிருத்தல்    இப்பிறப்பிலும்,  சிவனது
அருட்கடலில்  திளைத்தல்  இப்பிறப்பு  நீங்கிய  பின்னரும் என்பது
ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது.


மேல்