3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
16. தஞ்சை இராசராசேச்சரம்
164. | சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய வெண்ணிலா விரிதரு தரளக் குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும் குறிப்பெனோ ? கோங்கிண ரனைய குடைகெழு நிருபர் முடியொடு முடிதேய்ந் துக்கசெஞ் சுடர்ப்படு குவையோங் கிடைகெழு மாடத் திஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. (3) |
164. ‘மகுடத்தின்கண்’ என உருபு விரிக்க. ‘வெண்ணிலா விரிதரு குடை’ என்க. தரளத்தால் வெண்ணிலா விரிவதாயிற்று. தரளம்-முத்து. குறிப்பு-கருத்து. ‘‘குறிப்பென்னோ’’ என்றது, ‘மாதர் உள்ளங்களைக் கவர்வதுபோலும்’ என்னும் குறிப்புடையது. கோங்கு இணர்-கோங்கம்பூக்கொத்து ; இது குடைக்கு வடிவுவமை. துணியால் ஆக்கப்பட்ட குடைக்கு இவ்வுவமை பொருந்துவதாகும். தேய்ந்து-தேய்தலால். உக்க-உதிர்ந்த. ’உக்க குவை’ என இயையும். ‘‘செஞ்சுடர்ப்படு குவை’’ என்றதனால், ‘மாணிக்கக் குவை’ என்பது தோன்றிற்று. படு-உண்டாகின்ற. குவை ஓங்கு இடைகெழு மாடம்-குவியல்கள் மிக்கிருக்கின்ற இடத்திற் பொருந்திய மாடம். இடம், வீதி. ‘இடைகழி மாடம் என்பதும் பாடம். ‘மாடத் தஞ்சை’ என்க. இப்பாட்டு, காதல் நோய் கொண்டாள் கூற்றாய் அமைந்தது. |