3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
16. தஞ்சை இராசராசேச்சரம்
168. | தனிப்பெருந் தாமே முழுதுறப் பிறப்பின் தளிர்இறப் பிலையுதிர் வென்றால் நினைப்பருந் தம்பாற் சேறலின் றேனும் நெஞ்சிடிந் துருகுவ தென்னோ ! சுனைப்பெருங் கலங்கற் பொய்கையங் கழுநீர்ச் சூழல்மா ளிகைசுடர் வீசும் எனைப்பெரு மணஞ்செய் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. (7) |
168. ‘‘தாம்’’ என்றது இறைவரை. முழுதுற-எவ்விடத்தும் இருக்க ‘உறவும்’ என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால்-உடம்பாகிய தளிர் இறப்பாகிய இலை உதிர்நிலையை அணுகிற்றாயின். நினைப்பருந் தம்பால் சேறல் இன்றேனும்-அதுபோழ்து நினைத்தற்கும் அரிய இவர்பால் செல்லுதல் இயலாமை அறிந்தும். நெஞ்சு இடிந்து இவர்க்கு உருகுவது என்னோ - மனங் கலங்கி இவர் திறத்தில் சிலர் உருகுவது யாது கருதியோ. ‘நன்றாக வாழ்ந்த காலத்தில் இவரை (இறைவரை அடையாது இறக்குங் காலத்தில் சிலர் இவரை நினைந்து உருகுவது என்னோ’ என்பது இதன் முன்னிரண்டடிகளில் சொல்லப்பட்ட பொருள். ‘‘முழுதுற’’ என்றது, முன்னர் எளிதாயிருந்த செயல், பின்னர் இயலாததாய நிலையைக் குறித்தற்கு, ‘‘பிறப்பின்’’ என்றதில் இன், அல்வழிக்கண்வந்த சாரியை. ‘சுனைப்பொய்கை’ என்று இயைத்து, ‘சுனைபோல ஆழ்ந்த பொய்கை’ என இரைக்க. கலங்கல்-கலங்கல் நீர். கலங்குதல் மூழ்கும் மகளிரது சந்தனச் சேற்றாலாம். சூழல்-சூழ்ந்துள்ள. ‘சுடர் வீசும் மாளிகை’ என மொழிமாற்றி, ‘மாளிகைக்கண்’ என உருபு விரிக்க. எனைப் பெருமணம் செய்-எத்துணைப் பெரிய மணத்தையும் உண்டாக்குகின்ற (தஞ்சை என்க). ‘பொய்கைகளில் உள்ள கழுநீர்ப் பூக்கள், சுற்றிலும் உள்ள மாளிகைகளில் தம் மணத்தை உண்டாக்குகின்ற தஞ்சை’ என்பது பின்னிரண்டடிகளில் அமைந்துள்ள பொருள். |