9. சேதிராயர் திருவிசைப்பா
28. கோயில்
279. | சேலு லாம்வயல் தில்லையு ளீர்உமைச் சால நாள்அயற் சார்வதி னால்இவள் வேலை யார்விட முண்டுகந் தீரென்று மால தாகுமென் வாணுதலே. (1) |
279. அயல் சார்வது-பக்கத்தில் அணுகி நிற்றல். இது நாள்தோறுமாம். வேலை ஆர்-கடலில் நிறைந்து தோன்றிய. உகந்தீர்-அதனையே அமுதமாகக் கொண்டீர். என்று-என்று இடையறாது கூறி. மால் ஆகும்-பித்துடையவள் ஆகின்றாள். ‘அவளுக்கு அருளல் வேண்டும்’ என்பது குறிப்பெச்சம். அது, பகுதிப்பொருள் விகுதி. வாள் நுதல்-ஒளியையுடைய நெற்றி; இஃது, ஆகுபெயராய். ‘ஒளி பொருந்திய நெற்றியை உடைய என்மகள்’ எனப் பொருள்தந்தது. ‘‘அயற் சார்வதினால் மாலதாகும்’’ என்றதனால், இறைவரது வசிகரம் விளங்கும். ‘‘விடம் உண்டு உகந்தீர்’’ என்றதனால், ‘அதனினும் நான் கொடியளோ’ என்பது குறித்தாள். |