2. சேந்தனார் திருவிசைப்பா
5. திருவீழிமிழலை
56. | உளங்கொள மதுரக் கதிர்விரித் துயிர்மேல் அருள்சொரி தரும்உமா பதியை, வளங்கிளர் நதியும் மதியமும் சூடி மழவிடை மேல்வரு வானை, விளங்கொளி வீழி மிழலைவேந்தே’ என் றாந்தனைச் சேந்தன்தா தையையான் களங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனககற் பகமே. (11) |
56. உளம் கொள - உயிர்களின் உள்ளம் நிறையும்படி. மதுரம்-இனிமை; இங்குத் தண்மைமேல் நின்றது. ‘தண்கதிர்’ என்றதனால், திங்களாய் நிற்றல் பெறப்பட்டது. ‘‘கதிர்’’ என்றது. பின்வரும் அருளையேயாம். ஆம்தனை - இயலும் அளவு. சேந்தன்-முருகன்; இவ்வாசிரியர் பெயரும் அதுவாதல் கருதத் தக்கது. களம் கொள-என்முன் வந்து தோன்றுமாறு. பிழைக்குமோ - தவறுமோ; வாராதொழிவானோ! கைக்கொண்ட - பற்றிநின்ற. கனக கற்பகம்-பொன்வண்ணமான கற்பகத்தருப்போல்பவன். ‘‘சேந்தன் தாதையை’’ என்றதை ‘‘விடைமேல் வருவானை’’ என்பதன் பின்னும், ‘‘யான்’’ என்றதை, ‘‘என்று’’ என்பதன்பின்னும் கூட்டுக. |