3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
14. திருப்பூவணம்
149.
| செம்மனக் கிழவோர் அன்பு தாஎன்றுன் சேவடி பார்த்திருந் தலச எம்மனம் குடிகொண் டிருப்பதற் கியான்ஆர் ? என்னுடை அடிமைதான் யாதே ? அம்மனங் குளிர்நாட் பலிக்கெழுந் தருள அரிவையர் அவிழ்குழற் சுரும்பு பொம்மென முரலும் ஆவண வீதிப் பூவணம் கோயில்கொண் டாயே. (6) |
149. கிழவோர்-உரியவர் ; அடியார். ‘கிழவோர அலச’ என இயையும். ‘‘அன்பு’’ என்றது இறைவனது அருளை. பார்த்திருந்து - தோன்றுதலை எதிர்நோக்கியிருந்து. அலச-வருந்த, ‘அவர்களிடம் செல்லாமல் என்பால் வந்து என் மனத்தில் நீ குடிகொண்ட இந்நிலைக்கு நான் என்ன தகுதியுடையேன் ! எனது தொண்டுதான் என்ன தகுதியுடையது’ என்றபடி. அம் மனம்-அழகிய மனம் ; அடியவர் மனம். குளிர்நாள்- மகிழ்வதற்கு அமைந்த நாளில். சிவபெருமானது விழாக்களில் அவன் பலிக்கு (பிச்சைக்கு) எழுந்தருளும் விழாவும் ஒன்றாதல் அறிக. அரிவையரது குழல் அவிழ்தல். இறைவனைக் காதலித்தமையாலாம். குழல் சுரும்பு-கூந்தலில் உள்ள வண்டுகள் ‘‘பொம்மென’’ என்றது. ஒலிக் குறிப்பு. |