3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
15. திருச்சாட்டியக்குடி
152. | பெரியவா ! கருணை இளநிலா வெறிக்கும் பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால் தாழ்ந்தவா காதுகள் ! கண்டம் கரியவா ! தாமும் செய்யவாய் முறுவல் காட்டுமா ! சாட்டியக் குடியார் இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம் ! ஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே. (1) |
152. ‘‘பெரியவா’’ முதலியன, ‘பெரியவாறு’ முதலியவை கடைக்குறைந்து வந்தன. அவையெல்லாம் செவ்வெண்ணாய் நின்றமையின், இறுதியில், ‘இவை அழகிய’ என்னும் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. ‘கருணை பெரியவா’ என மாற்றுக. கருணை ஒன்றேயாயினும் அதனால் விளையும் பயன்கள் பலவாதல்பற்றி, ‘‘பெரிய’’ எனப் பன்மையாகக் கூறப்பட்டது. இள நிலா-சிற்றொளி. மொழுப்பு-முடி. சுழி அம் குழை-வளைந்த அழகிய குண்டலம். தாழ்ந்தவா-தொங்கினவாறு. ‘காதுகளில்’ என ஏழாவது இறுதிக்கண் தொக்கது. எனவே, அதனை, ‘‘சுழி’’ என்றதற்கு முன்னேகூட்டுக. ‘‘தாமும்’’ என்ற உம்மை, ‘தமது உறுப்புக்கள் இயற்கையில் இவ்வாறு விளங்குதலேயன்றி’ என, இறந்தது தழுவிய எச்சம். ‘‘முறுவல்’’ என்றது, ‘வெள்ளிய முறுவல்’ என்றவாறு. சாட்டியக்குடியார்-திருச்சாட்டியக்குடியில் உள்ள அந்தணர்கள். ‘முகம் அலர்ந்தவா’ என மாற்றிக் கொள்க. ‘‘தாமும் முறுவல் காட்டுமா’’ என்றதை இதன் பின்னர்க் கூட்டுக. அந்தணர்கள் கைகுவித்துத் தொழுதலைக் கண்டு இறைவற்கு உவகையால்முகம் மலர்ந்தது என்க. ஏழ் இருக்கை - ஏழு நிலைகள் அமைந்த விமானத்தை யுடைய மாளிகை. இது திருச்சாட்டியக்குடிக் கோயிலின் அமைப்பு, ‘ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்குப் பெரியவா’ என்று முன்னே சென்று இயையும் ; இஃது, ஏனைய திருப்பாடல்கட்கும் ஒக்கும். |