8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
27. கோயில்
268. | வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம் ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ தேனல்வரி வண்டறையுந் தில்லைச்சிற் றம்பலவர் நானமரோ என்னாதே நாடகமே யாடுவரே. (1) |
268, ‘தேவர்கள் இறந்தொழியாதவாறு நஞ்சினை உண்டு அன்று அவர்களைக் காத்த பேரருளாளர், இன்று என் வளைகளைக் கவர்ந்து எனக்கு இறந்துபாடு உறுவிக்கின்றாரோ ! இது வியப்பாகின்றது’ என்பது, முதல் இரண்டடிகளின் பொருள். ஓகாரம், இழிவு சிறப்பு. ‘தேன் வண்டு’ என இயையும். நமர்- நம் உறவினர். என்னாது - என்று சொல்லாதபடி; என்றது, ‘என் துன்பத்தைத் தவிர்க்காது நின்று’ என்றதாம். ‘‘நாடகம்’’ என்றது சிலேடை; இறைவனது அருட்கூத்தோடு, போலி வேடங்கொண்டு நடித்தலையும் குறித்தலின். தனக்கு அருளாமை பற்றி, அனைத்துயிர்க்கும் அருள்புரியும் கூத்தினை, ‘நாடகம்’ என்றாள் என்க. |