8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
27. கோயில்
271. | ஆரே இவைபடுவார்? ஐயம் கொளவந்து போரேடி என்று புருவம் இடுகின்றார் தேரார் விழவோவாத் தில்லைச்சிற் றம்பலவர் தீராநோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே. (4) |
271. ஆரே-நற்பண்புடையார் எவர்தாம். இவை படுவார்-இக்குணங்கள் தோன்ற நிற்பார். செய்யுளாதலின் சுட்டுப் பெயர் முன்வந்தது. எனவே, ‘‘இவை’’ என்றது. பிச்சையேற்பார்போல வந்து பெண்டிரை மயங்கச்செய்வனவாய் பின்வருங் குணங்களையாயிற்று. ஐயம்-பிச்சை. ‘‘போர்’’ என்றதை, ‘‘புருவம்’’ என்பதன் பின்னர்க்கூட்டுக. ஏடி-பெண்பால் விளிப்பெயர். ‘புருவத்தால்’ என உருபு விரிக்க. புருவத்தால் போரிடுதலாவது. புருவத்தை நெறித்துக் காதற்குறிப்புணர்த்துதல். இதனை, ‘‘போர்’’ என்றாள்; நோய் மாத்திரமே செய்துபோதலின். தீராநோய் செய்வார்-கெடுத் தொழியும் இயல்பினர். ஓக்கின்றார்-அவரோடு ஒரு தன்மையராய்க் காணப்படுகின்றார். ‘‘ஒக்கின்றார்’’என்றதனால் ‘இவரது இயல்பு அதுவன்று’ என்பது பெறப்பட்டது. |