65. ஒழிவு ஒன்று இல்லா- நீங்குதல் சிறிதும் இல்லாத. உண்மை வண்ணம் - (ஆவடுதுறைப்பெருமானது) உண்மை இயல்புகள். உலப்பிலள் - விடாது சொல்வாளாகிய இவள்; இஃது “ஆடினாள்” என்பதனோடு இயையும். இன்பவெள்ளம் - இன்பப்பெருக்கு. மொழிவு ஒன்று இலாப் பொன்னி - சொல்லப்படுதல் சிறிதும் இல்லாத மிக்க பெருமையையுடைய காவிரி. ‘‘முனி’’ என்றது, அஃறிணை வாய்பாடாய்ப் பன்மை குறித்து நின்றது. ‘முனிகளது மூர்த்தி’ என்க. மூர்த்தி - வடிவம். ‘முனிகள் கோடி கோடி’ என்னாது, அவர்களது ‘வடிவு கோடி கோடி’ என்றார், அவர்கள் இருந்து தவம்புரியும் காட்சியது சிறப்புணர்த்தற்கு, ‘திருவாவடுதுறை நவகோடி சித்தபுரம்’ எனக் கூறப்படுதல் இங்கு நினைக்கத்தக்கது ‘வெள்ளமும், தீர்த்தமும், மூர்த்தியும் அழிவில்லாத சாந்தையூர்’ என்க. சாந்தையூர் அணி ஆவடுதுறை - சாந்தையூரால் அழகுபடுத்தப்படும் திருவாவடுதுறை. இங்கு, ‘துறை’ என்றது, துறைக்கண் உள்ள நீரை. ‘ஆடினாள்; அதனால், இழிவொன்றிலாவகை (மேன்மையானநிலை) எய்தி இறுமாக்கின்றாள்’ என உரைக்க. ஈற்றில், ‘அன்னையே’ என்பது, ‘அனே’ எனக் குறைந்து நின்றது. மகளை, ‘அன்னை’ எனக் கூறும் மரபு வழுவமைதி, அகப்பாட்டுக்களில் பயின்று வரும். ‘இளமானளே’ எனப்பாடம் ஓதுதல் சிறக்கும். |