6. வேணாட்டடிகள் திருவிசைப்பா
21. கோயில்
210. | படுமதமும் இடவயிறும் உடையகளி றுடையபிரான் அடிஅறிய உணர்த்துவதும் அகத்தியனுக் கோத்தன்றே இடுவதுபுல் ஓர்எருதுக் கொன்றினுக்கு வையிடுதல் நடுவிதுவோ ? திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. (6) |
210. படுமதம்-மிக்க மதம். இடவயிறு-இடம் பெரிதாயவயிறு. இவற்றை யுடையகளிறு, மூத்த பிள்ளையார். ‘அயிராவணம்’ என்பாரும் உளர். ‘‘பிரான்’’ என்றது, ‘பிரானாகிய நீ’ என, முன்னிலைக்கண் படர்க்கை வந்த வழுவமைதி. அடி அறிய- உனது திருவருளை உணர்தற்பொருட்டு. ‘அடி அறிய ஓத்து உணர்த்துவது அகத்தியனுக்கு அன்றே எனவும், ‘இது நடுவோ’ எனவும் மாற்றுக. ஓத்து-ஆகமப் பொருள். சிவபெருமான் அகத்திய முனிவருக்கு ஆகமத்தை உபதேசித்தார் என்பதும் வரலாறு. ‘அகத்தியனுக்கு அந்நிலையை அருளி, அடியேனுக்கு உலகியலை அருளினாய்; இது, இரண்டெருதுகளை உடைய ஒருவன், ஒன்றற்குப் புல் இட்டு, மற்றொன்றற்கு வைக்கோல் இடுதல் போல்வது’ என்பதாம். |