100.
|
கொற்ற
வாழி குவலயஞ் சூழ்ந்திடச் |
|
|
சுற்று
மன்னர் திறைகடை சூழ்ந்திடச்
செற்ற நீக்கிய செம்மையின் மெய்ம்மனுப்
பெற்ற நீதியுந் தன்பெய ராக்கினான். |
15 |
(இ-ள்.)
கொற்ற...சூழ்ந்திட - வெற்றி பொருந்திய தனது
ஆணைச்சக்கரம் உலகத்தைச் சூழ்ந்து நிற்கவும்; சுற்று...சூழ்ந்திட -
அந்த ஆணையினாலே சுற்றப்பெற்ற அரசர் திறைப்பொருள் தனது
கடைவாயிலில் சூழ்ந்துகொண்டு இருக்கவும்; செற்றம்...ஆக்கினான் -
கோபத்தை நீக்கிச் செம்மையினாலே உண்மையே உருவமாகிய
ஆதிமனுச் சக்ரவர்த்தி பெற்ற மனுநீதி என்பதைத் தனது பெயராலே
அமைந்ததாக ஆக்கிக்கொண்டான்.
(வி-ரை.)
செம்மையின் - சூழ்ந்திட - சூழ்ந்திட -
ஆக்கினான் என்று வினை முடிவு செய்க.
கொற்ற ஆழி - ஆழி
- சக்கரம். அரச ஆணையை ஒரு
சக்கரமாகக் கூறுதல் மரபு. செலுத்தியவாறெல்லாம் ஓடிச் சுற்றிச்
செல்வதனால் சக்கரம் போன்றது என்க.
ஆழியின் கொற்றமாவது இவனது ஆணையானது எங்குச்
செலுத்தினும் வெற்றியே பொருந்தி நிகழ்தல். வேறொன்றினாலும்
வாதிக்கப்படாத ஆணை. இதனை ஆக்ஞா என்பர் வடநூலார்.
இறைவனது ஆணைபோல இவ்வரசனது ஆணையும் ஆம் என்பர்.
அதனாலே அரசரை இறை என்று அழைப்பது மரபாயிற்று.
குவலயம்
- கு + வலயம். கு - பூமி. குவலயம் - சுற்று.
பூமியின் இவ்வரசனுடைய ஆணை வரம்பாகிய எல்லை.
சுற்று மன்னர் - தனது ஆணையினாற் சுற்றப்பட்டாரும்,
அன்றி அதற்குட்படாமலே நட்புவேண்டித் தன்னைச்
சுற்றிக்கொண்டாரும் ஆகிய அரசர்கள். “ஆழி குவலயம் சூழ்ந்திட“
என்றாராதலின் அதனாற் சூழப்பெற்ற என்பார் சுற்றும் என்றார்.
சுற்றும் - சுற்றப்படும் - எனச் செயப்பாட்டு வினைப் பொருளில்
வந்தது. இவர்களேயன்றிச் “செல்லாத பல்வேறு தீபத்துச்
செங்கோன்மை வல்லாரும்...நட்படைய நடக்கின்றார்“ என்ற
திருவிளையாடற் புராணம் - வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலத்
திருப்பாட்டிற் காணுமாறு, ஆணையினாற் சுற்றப்படாத பலரும்,
தாமாகவே இவரது நட்பினாற் பயன் பெறும்பொருட்டு இவர்
வாயிலிற் சூழ்கின்றார்கள் என்பதும் குறிக்கச் சுற்றும்
மன்னர் என்றார்.
மன்னர் திறைகடை சூழ்ந்திட
- மன்னரும் அவர்
கொணரும் திறையும் கடைவாயிலிலே சூழ.
செற்றம் நீக்கிய செம்மையின் - இவ்வாறு
ஆழி சூழ்வதும்
திறைசூழ்வதும் தமது போர் வலிமையாலன்றி அன்பினால் அமைந்த
ஆணை வலிமையினாலே உளவாயின என்பது குறிக்கச் “செற்றம்
நீக்கிய செம்மையின்“ என்றார். செற்றம் - கோபமும் அதன்
வழித்தாய் வரும் தீக்குணங்களும். நீக்கிய - தன்னிடத்திலேயும்
தன் ஆணை சூழ்ந்த யாவரிடத்திலேயும் இல்லாமற் போக்கிய.
உலக வாழ்க்கையிலே விளையும் தீமைகட்குக் காரணமாக நின்ற
தீக்குணங்களிலே முதன்மை பெற்றது கோபம் என்பதே. அதனை
நீக்கினாற்றான் உலகத்திலே எல்லா உயிர்களிடத்தும் செம்மையாகிய
வாழ்வு நிகழும். ஆதலின் செற்ற நீக்கிய செம்மையின் என்றார்.
நீங்கிய என்னாது நீக்கிய என்றதனாலும் இக்கருத்தை
வலியுறுத்தியபடியாம்.
செம்மை இன்
- செம்மையினாலே. செம்மை காரணமாக.
ஏதுப் பொருளில் வந்தது.
மனுப்பெற்ற நீதி
- என்றது குல முதல்வனான மனு அரசன்
செலுத்திய நீதியினை அல்லது ஆட்சியினை, அந்நீதிகளைத்
தொகுத்து மனுதரும சாத்திரம் என வழங்குவர்; அந்த மிருதியாகிய
மனுதரும சாத்திரம் அக்காலத்துக் கேற்ப வகுக்கப் பெற்றது.
ஆதலின் இந்நாளில் பலரும் மயங்கி யறிவது போல அது கொண்டு
செற்றமும் பூசலும் விளைத்தல் பொருந்தாது என்க. “செற்ற நீக்கிய
செம்மை“ என்றும், “மெய்ம்மனு“ என்றும் கூறிய குறிப்புக்கள்
ஆசிரியரது தெய்வ வாக்காதலால், அவை இந்நாளில் விளையும் மனுவைப் பற்றிய போராட்டங்களை
விலக்கவே எழுந்தன
போலவும் தொனிக்கின்றன.
தன் பெயராக்கினான்
- முன் மனுஅரசன் செலுத்திய நீதி
ஆட்சியைப் போலவே இவ்வேந்தனும் செலுத்தியதனால்
அப்பெயருடன் சேர்த்துச் சொல்லப் பெற்றான்.
இக்காலத்துக்கு முன்சொல்லிய அத்தரும சாத்திரம்
ஏலாதென்று காலத்திற்கேற்பப் பராசரர் சுமிருதி வகுத்தார் என்றும்,
அதனாலே, கலௌபராசர' என விதித்தனர் என்றும் கூறுவர்.
இதனுண்மைகளை ஆராய்ந்து தெளிக.
மனு - மன் - பகுதி - நினைத்தல் - “மனனம்“
என்பதும்
காண்க. மனு - எல்லாராலும் நினைக்கத் தக்கவன்,
நினைக்கவேண்டியவற்றையே நினைப்பவன் என்பன பொருளாம்.
மன உணர்ச்சியுடைமையாலே மக்கள் மானிடர் எனப் பெற்றார்
என்பர்.
ஆணை - (கடவுள்) இறைவன் ஆணை - பெரியோர் ஆணை
அரசனாணை - இவை மூன்றும் ஒன்று போலக் காரணம்
வினவாமலே விசுவசித்துப் பின்பற்றிக் கீழ்ப்படியத் தக்கன.
இவ்வாணைகளைக் கீழ்ப்படிந்த பின்னரே காரணம் தெரியவரும்.
பெரியோர் ஆறுவது சினம் - ஓதுவதொழியேல் - ஒளவியம்பேசேல்
- என்பனவாதி ஆணைகளை முதலில் தந்தனர். அவற்றிற்குக்
கீழ்ப்படிந்து நடந்தார்க்குத் “தீராக் கோபம் போராய் முடியும்“
“ஓதாதார்க்கில்லை யுணர்வொடு மொழுக்கம்“ - “ஒளவியம் பேசுத
லாக்கத் திற்கழிவு“ என்பனவாதி அந்த ஆணைகளுக்குரிய
காரணங்களைப் பின்னரே முறையே விரிந்து உணர்த்தினது காண்க.
குழந்தைகளுக்கு ஆணைகளின் காரணங்காட்வதென்பதும், அது
தெரிந்த பின்னரே அவை அவற்றைப் பின்பற்றுவதென்பதும் இயலா.
அவ்வாறு செய்வதாயின் வாழ்க்கை நடைபெறாது. குழந்தைப்
பக்குவமுடையாரே உலகிற் பலராதலின் உலக ஒழுக்கத்திலும்
இவ்வாறே நியதியாம். முதலிலே இவ்வாணைகளைப் பின்பற்றி
ஒழுகிய பின்னர் அதன் பயனை அறிந்து அவ்வொழுக்கத்தின்
நிலைபெறுதல் வேண்டு மென்பது அறிஞர் துணிபு.
சில பிரதிகளில் இப்பாட்டு இதனை அடுத்த ‘பொங்குமாமறை'
எனும் பாட்டின் பின் காணப் பெறுகின்றது. 15
|
|
|
|