| 103. 
           | 
          தவமுயன் 
            றரிதிற் பெற்ற தனியிளங் குமர னாளுஞ் | 
            | 
         
         
          |   | 
          சிவமுயன் 
            றடையுந் தெய்வக் கலைபல திருந்த  
                                            வோதிக் 
            கவனவாம் புரவி யானை தேர்படைத் தொழில்கள் 
                                             கற்றுப் 
             
            பவமுயன் றதுவும் பேறே யெனவரும் பண்பின்  
                                             மிக்கான். | 
          18 | 
         
       
       
           (இ-ள்.) 
      தவம்...குமரன் - (மேலே சொல்லியவாறு சிவத்தை  
      முன்னிட்ட) தவஞ்செய்து பெற்ற ஒப்பில்லாத அரச இளங் குமரன்;  
      நாளும்...ஓதி தினமும் முயற்சி செய்து சிவத்தை அடைவிக்கும்  
      தெய்வக் கலைகள் பலவற்றையும் திருந்தக் கற்றதனோடு; கவன... 
      கற்று (தனது குலத்துக்கேற்றவாறு) குதிரை, யானை, 
      தேர், படை  
      ஆகியவற்றின் தொழிற் கல்வியும்பயின்று; பவம்...பண்பின் - ஆன்மா  
      முன்செய்த வினைப் பயனாக எடுக்கும் வேண்டத்தகாத இப்பிறவியும்  
      இவனிடத்துப் பேறே ஆயிற்று என்று சொல்லும் தன்மையில்;  
      மிக்கான் - மிகுந்து விளங்கினான். 
       
           (வி-ரை.) 
      தவமுயன்று - மேலே இரண்டு பாட்டுக்களிலும்  
      சொல்லியவாறு அரசன் செய்த சிவதருமமும், சிவபூசையுமே தவமாம்.  
      “எங்குமாகி யிருந்தவர்“ என்றும், “ஆராய்ந்துளான்“ என்றும் 
       
      குறித்தமையால் இவ்வரசன் தானும் ஆன்மார்த்தமாய்ப் பூசைசெய்து  
      அவ்வொழுக்கத்து நின்றான் என்பதும் கொள்ளப்பெறும். 
       
           நாளும் முயன்று சிவம் அடையும் தெய்வக்கலை - நாளும் 
       
      முயல்வதனாற் சிவத்தை அடைவதற்குரிய தெய்வத் தன்மை வாய்ந்த  
      - தெய்வத்தைத் தேடிக் கொடுக்கிற - சிவக்கலைகள். அவை வேதம்,  
      சிவாகமம், வேதாங்கம், புராணம், இதிகாசம், ஆயுள் வேதாதி  
      உபவேதங்கள் முதலியன. 
       
           திருந்த ஓதி - திருந்த 
      ஓதுதல் - கசடறக் கற்றல். “கற்க  
      கசடற“ என்றதிற் காண்க. 
       
           படைத் தொழில்கள் 
      - அரச மரபினுக் குரியனவாய்,  
      உடம்போடு பற்றி, உலக நிலையில் வேண்டப்படுவன. வில், வாள்  
      முதலிய படைக்கலத் தொழில்கள். படை - காலாட்படை. 
       
           தொழில்கள் 
      - புரவித்தொழில், யானைத்தொழில்,  
      தேர்த்தொழில், படைத்தொழில் என்று தனித்தனி கூட்டுக. இதனாலே  
      தொழில்கள் என்று பன்மையாற் கூறினார். 
       
           பவமுயன்றதுவும் பேறே 
      - இப்பிறப்பிற்கு முன்னே செய்த  
      வினை முயற்சியாலே இவ்வுடம்பு வரும்; ஆயினும் இப்போது  
      செய்யும் சிவதருமங்களினாலே இவ்வுடற் பிறவியும் பேறே என்று  
      சொல்லத் தகும் - என்றபடி. பவம் 
      - பிறவி. 
       
       
      
         
          “இனித்த 
            முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால் 
            மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே“ | 
         
       
       
      என்பது அரசுகள் திருவாக்கு. 
      உம்மை வேண்டத்தகாத இழிவு சிறப்பு. 
       
       
      
         
          “தங்கு 
            பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை  
                                         சாதித்தார்“ | 
         
       
       
      என்பது அரசுகள் சரிதம். 
      (திருநா - புரா - 312). இங்குப் பேறே  
      என்றது இக்கருத்தே பற்றியது. பண்பின் மிக்கான் - பண்பின்  
      மிகுதலாவது கற்றதற்குத் தக்கபடி நின்று ஒழுகி அத்தன்மை  
      பெறுதல். பேறு 
      - பாக்கியம். 
       
           தொழில் கற்று 
      - மேலே தெய்வக்கலை பல ஓதி என்றதற்கு  
      வேறாய்த் தொழில்கள் கற்று என்றார். முன்னர்ச் சொல்லியது  
      உயிரினைப் பற்றியது. தொழில்கள் உடம்பைப் பற்றியன.  
      இச்சிறப்பினாலே கலை பல திருந்த என்று முதலிற் கூறினார். 
       
           ஓதி - 
      என்பதனால் “கற்க“ என்பதும், திருந்த என்பதனால்  
      “கசடற“ என்பதும், கலைபல என்றும் தொழில்கள் என்றும்  
      கூறியதனால் “கற்பவை“ என்பதும், பண்பில் மிக்கான் என்பதனால்  
      “நிற்க வதற்குத் தக“ என்பதும் பெறப்படுதல் காண்க. 
       
           தெய்வக்கலை ஓதியும், தொழில்கள் கற்றும், இவ்வாறு 
       
      “அளவில் தொல்கலைகள் முற்றி - இளவரசுக்கு அணியனானான்“  
      என்று பின்னர்க் கூறுவதால் அரசகுமாரருக்குக் கல்வி  
      இன்றியமையாது வேண்டப்படுவ தென்பதும், இது தெய்வக்கலை  
      பல கூடிய கல்வி என்றும், தொழிற்கல்வி என்றும் இருவகைப்படும்  
      என்பதும் பெற்றோம். அரசருக்கே கல்வி வேண்டுவதானால்,  
      ஏனைக் குடிகளுக்கும், யாவருக்கும் அது மிகவும் வேண்டப்படுவது  
      என்பது பெறப்படும். கல்வி முறையில் உரிய தொழிற் கல்வியை  
      விட்டும், கலைக் கல்வியில் தெய்வக்கலையை அடியோடு மறந்து  
      விட்டும், அமைந்துள்ள இந்நாட் கல்விமுறை அறிஞர்களால் முற்றும்  
      வெறுக்கத் தக்கது என்பதும் இங்குப் பெறப்படும். இந்நாள் நாட்டின்  
      கேட்டிற்கு இத்தகைய கல்விமுறையே காரணம் என்பர். 
       
           திருவள்ளுவ நாயனார் “கல்வி“, “கல்லாமை“ 
      என  
      இரண்டாக வகுத்து, இதனைப் பொருட்பால் அரசியலில்  
      இறைமாட்சியினை அடுத்து வைத்துள்ள சிறப்பை இங்கு உன்னுக.  
      ‘கல்வி' எனும் அதிகாரத்திற்குத் தோற்றுவாய்செய்த ஆசிரியர்  
      பரிமேலழகர் “அஃதாவது அவ்வரசன் தான் கற்றற்குரிய நூல்களைக்  
      கற்றல். அவையாவன : அறநூலும், நீதிநூலும், யானை, குதிரை, தேர்,  
      படைக்கல மென்றிவற்றினூல்களும் முதலாயின. அரசன் அறிவுடைய  
      னாயக்கால் தன்னுயிர்க்கேயன்றி மன்னுயிர்க்கும் பயன்படுதல்  
      நோக்கி, இஃதரசியலுள் வைக்கப்பட்ட தாயினும், யாவர்க்கும்  
      உறுதி பயத்தற் சிறப்புடைமையிற் பொதுப்படக் கூறுகின்றார்“  
      என்று பாகுபடுத்திக் கூறியதும் இப்பாட்டிலும் வைத்து உணர்க. 
       
           கவன வெம்புரவி 
      - என்பதும் பாடம்.   18 
   |  
	 
	 |   
				
				 | 
				 
			 
			 |