(இ-ள்.)
பொன்னின்........புனைந்து என - பொன்னின்
மேலே
வெள்ளிய திருநீற்றை அணிந்தாற்போல; பன்னும்....பாலது - எடுத்துச்
சொல்லற்குரிய நீண்ட இமயமலையின் பகுதியில் உள்ளது;
தன்னை...........அறிவரியான் - யாவர்க்கும் தனது தன்மையை
இன்னதென்று அறிவதற்கு அரிதாயிருக்கின்ற சிவபெருமான்;
என்றும்....மா மலை - எக்காலத்தும்
நீங்காமற் பொருந்தி
வாழ்தற்கிடமாகிய கயிலை என்கின்ற பெரிய திருமலையாகும்.
(வி-ரை.)
கயிலைத் திருமாமலை..........பனிமால்வரைப்
பாலது என்று முடிக்க.
பொன்னின்
வெண்திருநீறு புனைந்தென - இது உவமானம்.
பொன்னின் மேல் வெள்ளிய திருநீறு அணிந்தாற்போல மால் வரையின் மேலே பனி
உறைந்து உள்ளது என்பது.
பனிமால்வரை
- பெரிய இமயமலை. இது பொன்மலை என நூல்களிற் பேசப்பெறும். இமாசலம்
- இமாலயம்.
(The Himalayas) என்பது. பன்னும் - பலவாற்றாலும் புகழ்ந்து
பேசப்படுவது. நீர் பனிக்கட்டியாக உறைந்து கிடக்கும் மலையாதலின்
பனிமால்வரை என்றார். இது அன்பின் நீர்மை உறைப்புப்பெற்றுத்
தங்கும் இடம் என்பது குறிப்பு; இறைவனுடைய திருக்கயிலை இதில்
இருத்தலின் - என்க. உலகிலே மிகப்பெரிய மலைத்தொடர்ச்சி. இதன்
சிகரமே உலகில் மிக உயர்ச்சி யுடையது. அந்தச் சிகரம் கயிலை
மலையாம். மிக உயர்ந்த மலையின் மிக உயர்ந்த சிகரம் என்க.
இஃது எப்பொழுதும் பனிக்கட்டியால் மூடப்பெற்றிருக்கும். ஆதலின்
வெண்மையாய் வெண்ணீற்றுக் கோலமாய் விளங்கும். குறித்த
உயரத்துக்கு மேற்பட்ட இடங்கள்தான் பனியால்மூடப்படும்.
அவ்வுயரத்துக்குக் கீழே உள்ள மலையின் பாகங்கள் பனிமூடாமல்
தூரப் பார்வைக்குப் பொன்னிறமாகவே காட்டும். ஆதலின்
‘பொன்னின் மேல் வெண்ணீறு புனைந்தாற்போல்’
என்றார்.
வரைப்பால் - வரையின் ஒரு பகுதி. இது கயிலை மலையின் தூர
தரிசனம் கூறியபடி.
தன்னை
யார்க்கும் அறிவரியான் - “இன்ன தன்மையன்
என்று அறியொண்ணா எம்மானை”
என்பது சுந்தரமூர்த்திகளது
திருவாரூர்த் தேவாரம். “யாவராயினும் அன்பரன்றி அறியொணா
மலர்ச் சோதியான்” (திருவாசகம்). “கனகக் குன்றத் தெழிற் பெருஞ்
சோதியை”“பொன்னெடுங் குன்றமொன் றுண்டு கண்டீர்”
என்பனவாதி திருவிருத்தங்களால் அப்பர் சுவாமிகள்
துதித்தருளியபடி பொன்மலையும் கயிலைவெண்சிகரமும் இறைவன்
வடிவமாகவே விளங்குவது. ஆதலின் அத்தோற்றத்திற்குள்ளே
“அரியான்” மன்னி வாழ்கின்றான்
என்று குறிப்பிட்டபடியுமாம்.
“பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ றணிந்து” என்னும்
தேவாரமும் காண்க. மன்னிவாழ் கயிலைத் திருமாமலை -
இத்திருமலையையே சிவசொரூபமாகக் கண்டு அதனுள்ளே
சிவத்தையும் கண்டு ஆசிரியர் தரிசித்து நம்மையும் தரிசிக்கச்
செய்கின்றபடி காண்க. இதில் விளங்கும் பெருமானைப் போலவே
இந்த மலையும் உயர ஆகாய விமானங்களிற் பறந்து காண்பவர்க்கும்
அறிதற்கரியதாய் விளங்குவது இந்நாட் கண்கண்ட காட்சியாம்.
கயிலை - இது பூகைலாயம். (நூல்களிற்
பேசப்பெறும் மகா கயிலாய மன்று) மதங்காகமம் காண்க. இங்கே மன்மத தகனம் -
சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் - முதலியன நிகழ்ந்தன. இதிற்
பஞ்சரிஷிகளது ஆசிரமங்களும் உள்ளன. பின்னர் “முனிவர்
அஞ்சலி மாலையும் முன்னெலாம்” என்று கூறுவது காண்க. அப்பர்
சுவாமிகள் திருக்கயிலை யாத்திரை செய்த இடம் இதுவே. இறைவன்
மும்மூர்த்திகட்கு முதல்வராய் உபதேசம் செய்தனர் என்பது வரலாறு.
சமீபகாலத்தில்
இம்மலையின்
ஒரு பாகத்தில் சிந்துநதிச் சார்பிலே
ஒரு பெரிய மண்மேட்டைத் தோண்டிப் புதைந்து கிடந்த ஒரு
பெருநகரங் கண்டுள்ளார்கள். அதிற் சைவப்பெருமைகளும்,
சரிதங்களும், பழமையும் காணப் பலபொருள்கள் கிடைத்தன.
அதிலே ஒன்று - மூன்று சிரமும் நான்கு கைகளும் கொண்டு
யோகாசனத்தில் உபதேச மூர்த்தியாய் ஒரு மரத்தடியில் வீற்றிருக்கும்
உருவமாய் இதனைச் சுற்றிப் புலி யானை இருடிகள் முதலியன
காணப்பெற்றது. இது மேற்குறித்த மும்மூர்த்திக்கு உபதேசித்த
ஆசாரியமூர்த்திக் கோலம் போலும்.
காதுகளைப்
பொத்திக்கொண்டு கேட்பதுபோல உள்ள உருவங்களும்
பக்கத்திருப்பனவாம். சிவலிங்கம், நந்திதேவர்,
அம்பிகை முதலிய
உருவங்களும் உள்ளன. இவற்றின் விரிவை சர். ஜான்
- மார்ஷல்
என்பவர் எழுதிய “சிந்து நதிக் கணவாய் நாகரிகம்”
(Indus
Valley Civilisation) என்னும் நூலுட் காண்க. மேலே கண்ட
மும்மூர்த்தி உபதேசக் கோலத்தைக் கேட்கும்போது.
“காது
பொத்தரைக் கின்னர ருழுவை கடிக்கும் பன்னகம்
பிடிப்பருஞ் சீயம்
கோதின் மாதவர் குழுவுடன் கேட்பக் கோல வானிழற்
கீழறம்
பகர” |
என்னும் சுந்தரமூர்த்திகளது திருநின்றியூர்த் தேவாரம்
- (6)
நினைவுக்கு வரும்.
என்றும் மன்னி
- எக்காலத்திலும் நீங்காது நிலைபெற்று
ஊழிக்காலத்திலும் தான் அழியாமல் நிற்பதாலும், எல்லாவற்றையும் அழிக்கும் நாயனாகிய
சிவபெருமானுக்கு இருப்பிடமாய் நிற்பதாலும்
என்றும் - எக்காலத்தும் - என்றார். இதனையே திருநொடித்தான்
்மலை என்று சுந்தரமூர்த்திகள் தேவாரத்திற் போற்றுதல் காண்க.
நொடித்தல் - அழித்தல்.காரைக்காலம்மையார்
தலையால் நடந்து
சென்ற கயிலை இது. 1