112. தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்தவாத் தரியா
                                    தாகி
 
  முன்னொருப் புயிர்த்து விம்மி முகத்தினிற்
                            கண்ணீர் வார
மன்னுயிர் காக்குஞ் செங்கோன் மனுவின்பொற்
                           கோயில் வாயிற்
பொன்னணி மணியைச் சென்று கோட்டினாற்
                          புடைத்த தன்றே.
27

     (இ-ள்.) தன்...தரியாதாகி - தன் உயிர்போன்ற கன்று
இறந்துபடப் பசு அத் துயரத்தைத் தாங்க முடியாதாகி; முன்...வார
- முன்னே நெருப்பு வீசுதல்போலப் பெருமூச்சுவிட்டு, விம்மிக்
கொண்டு, முகத்திலே கண்ணீர் பெருக, (எழுந்து) நடந்து சென்று;
மன்னுயிர்...புடைத்தது - உலகத்தில் நிலைபெற்ற எல்லா
உயிர்களையும் காக்கின்ற செங்கோன்மை வல்ல மனு அரசனது
அழகிய அரண்மனைவாயிலில் கட்டிய அழகியமணியைத் தன்
கொம்பினால் அசைத்து அடித்தது; அன்றே - அப்போதே.

     (வி-ரை.) ஆ - தரியாது - உயிர்த்து - விம்மி - சென்று -
மணியைப்- புடைத்தது.

     வீய - இறந்துபட. “உம்பரின் அடைய“ 108.


 மன்னுயீர் காக்கும் - உலகில் நிலவிய எவ்வகை உயிர்களையும்.
மேலே (14) “மன்னுயிர்கட்கெலாம்...காவலான்“ என்றதும், கீழே (36)
“மன்னுயிர் காக்குங் காலை“ என்பதும் காண்க. காக்கு மனு - முன்
காத்த மனுவைப்போல இப்போது காக்கும்.

     பொற்கோயில் வாயில் பொன்னணிமணி -
பொற்கோயில்
- அரண்மனை. இலக்குமியைக் கொண்ட திருமால்
போன்று காவற்றொழில் செய்யும் அரசன் வாழுமிட மாதலின்
பொற்கோயில் என்றார். பொன் - இலக்குமி; வாயில - வழி. தீமை
புகாமைக்கும், நன்மை புகுதற்கும், வழியாயிருத்தலின் வாயில் எனப்
பெற்றது. பொற்கோயில், பொன்னணிமணி, என்றதற்கேற்ப இதுவும்
பொன் வாயில் என்க.

     பொன் அணி மணி
- பொன்னினாலே அழகு செய்யப்பட்ட
மணி. பொன் அணிபோன்ற - என்றலுமாம். இதனை ஆராய்ச்சி
மணி என்பர். மணி அடிக்கப் பெற்றால், அது ஒரு குற்றம் அல்லது
அநீதி நிகழ்ந்துவிட்டமையை அறிவிக்கும்; அக்குற்றம் யாவர்
செய்தனர் என்ற ஆராய்ச்சி அதனின்று தொடங்கும்; அவ்வாறு
ஆராய்ச்சியைக் கிளப்புவதால் அதற்கு ஆராய்ச்சி மணி என்று
பெயர். தமது குறையை, மணி யடிப்பதன் மூலம் வேறொருவர்
உதவியின்றி இலகுவில் தாமே அறிவித்துக்கொள்ளும் பொருட்டு
அரண்மனை வாயில் வெளியில் ஒரு மணியைக் கட்டிவைப்பது
அந்நாள் அரசர் நீதிமுறை வழக்கங்களில் ஒன்று. இப்பசு
அஃறிணையேயாயினும் உயர்திணைபோலவே அறிவுபெற்று இச்செயல்
செய்தது என அரசர் விதந்து கூறுவார். இது
பசுவுருவுடையதேயாயினும் பசுவல்லாது இறைவனது அருளாகிய
அறக்கடவுளேயாதலின் அருளை வெளிப்படுக்கும் தேவர்
செயலைச்செய்தது - என்பதும் குறிப்பு.

     செங்கோல்
- ஒருபாற் கோடுதலில்லாது யாவரிடத்தும் ஒரே
தன்மையாய் நிகழ்வது. உயிர்த்தல் - விம்மல் - கண்ணீர் வார்தல்
என்ற மெய்ப்பாடுகள் துன்பத்திற் போலவே அன்பினாலும் நிகழும்.
இப்பசுவினால் வெளிப்பட்ட இவை துன்பம்போலத்தோற்றினும்
முடிவில் அன்பு வெளிப்பாட்டிற்கேயாயினமை காண்க.

“விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
தம்மாண் பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்“
                 - திருவாரூர் - குறிஞ்சி - 6

என்று இந்தத் திருவாரூரிலே அன்பினது இலக்கணத்தை அப்பர்
சுவாமிகள் எடுத்துக்காட்டி அருளியிருப்பதும் காண்க.   27