118. மன்னுயிர் புரந்து வையம் பொதுக்கடிந் தறத்தி
                                   னீடும்
 
  என்னெறி நன்றா லென்னு மென்செய்தாற் றீரு
                                மென்னுந்;
தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு
                                சோரும்;
அந்நிலை யரச னுற்ற துயரமோ ரளவிற் றன்றால்.
33

     (இ-ள்.) மன்னுயிர்...என்னும் - “நிலைபெற்ற உயிர்களை
எல்லாம் தீங்கு வராமற் காத்து உலகம் எல்லார்க்கும் பொதுவா
மென்பதின்றி எனக்கே உரியதென்னும்படி தரும வழியே இந்நீண்ட
காலம் செலுத்திய எனது அரசாட்சி மிக நன்றாயிருக்கின்றது!“ என்று
தன்னைத்தானே இகழ்ந்து கூறுவான்; என்...என்னும் - என்ன
செய்தால்தான் இது தீர்வடையப்போகிறது! என்று சொல்வான்;
தன்...சோரும் - தனது இளங்கன்றைக் காணாத தாய்ப் பசுவைப்
பார்த்துச் சோர்வடைவான்; அந்நிலை...அன்றால் - இவ்வாறு
அந்நிலையில் அரசன் அடைந்த துன்பத்திற்கு ஓர் எல்லை இல்லை.

     (வி-ரை.) உயிர்புரந்து அறத்தில் நீடுதல் - அறத்திலே
நிலைத்து நின்று உயிர்களைக் காத்து, அறத்தின் வழியே காவல்
புரிதல். இதனாலே “காவலன்“ என்ப. இதன் விரிவை “மாநிலம்
காவலனாவான்“ என்னும் 121-வது பாட்டிற் காண்க.

     பொதுக் கடிந்து - உலகம் காத்தல் பிறருக்கும் உரியது
என்று பொதுவாதலை நீக்கித் தனக்கே உரிமையாக்கிக் கொண்டு
என்க. “பொதுக் கடிந்து இனிது காக்கும் கொற்றவன்“ என்பது
திருநாட்டுச் சிறப்பு. 85-வது பாட்டு.

     என் செய்தால் தீரும் - என்பது தீர்வில்லாமை கருதியது.
சோரும் - அதன் துயத்தை மாற்றும் வழியில்லையே என்று
சோர்வடைந்தான்.

     அறத்தின் நீடும் என் நெறி
- முன் மனுஅரசர் காலம்
முதல் இதுவரை நீடிவந்து அறவழியிலேயே நிலைத்து நின்றதாகிய
எனது அரசு.

     நீடும் - பின்னரும் அவ்வகையே நீடும் என்பதும் தொனிக்
குறிப்பாகும்.

     இப்பாட்டிற் குறித்தவை அரசன் தனக்குத் தானே
சொல்லியவை.   33