139. அகில காரணர் தாள்பணி வார்கடாம்  
  அகில லோகமு மாளற் குரியரென்
றகில லோகத்து ளார்க ளடைதலின்
அகில லோகமும் போல்வ ததனிடை.
4

     (இ-ள்.) அகில காரணர்...........என்று - எல்லா
உலகங்களுக்கும் கர்த்தாவாயுள்ள சிவபெருமானது திருவடிகளையே
பற்றாகப் பணிபவராய் இங்கு எழுந்தருளியிருக்கும் அடியார்களே
எல்லா வுலகங்களையும் ஆட்சி செய்தற்கு உரியார் என்ற
காரணத்தால்; அகில லோகத்து........அதன் இடை - எல்லா
உலகத்துள்ளார்களும் அவர்களது ஆட்சிக்குள் ளமைந்து வணங்க
இங்கே வந்து அடைகின்றார்கள். ஆதலின் அத்தேவாசிரியனின்
இடமானது எல்லா வுலகங்களையும் ஒன்று சேர்த்தது போன்றுளது.


     (வி-ரை.) அகில காரணர் - மேல் - கீழ் - நடு ஆகிய
எல்லா உலகமும் தோன்றி நின்று ஒடுங்குதற்குக் காரணமாயுள்ளவர்
சிவபெருமான். இங்குக் காரணர் என்பது நிமித்த காரணரா யிருக்கும்
தன்மையை. “ஒடுங்கி மலத்து உளதாம் அந்த மாதி“ முதலிய
சித்தாந்த உண்மைகளை இங்கு வைத்துக் காண்க.

     பிரமதேவர் சிருட்டி கருத்தா என்பது முதலாகச் சொல்லப்
பெறுவது உபசார வழக்கு. இவை ஐந்து இடங்களும் ஒரே
மத்தியமுள்ளனவாகி ஒன்றற்கொன்றுவிரிந்த ஐந்து சக்கரங்கள் போல
உள்ளன. என்று ‘பஞ்சேஹாரே' எனும் வேதவாக்கியம் உணர்த்தும்.
வெளியே விரிந்து மற்றவற்றை உள்ளடக்கியது சதாசிவ சக்கரம்.
சதாசிவ மூர்த்தியே இவ்வைந்தொழில் அதிகாரமும் தமக்குள்
வைத்துப் பிரமதேவராகிச் சிருட்டித்தொழிலும், விட்டுணுவாகிக்
காத்தற் றொழிலும் முதலியவை செய்பவராம். இப்பொருளைத்
திருஞான சம்பந்த சுவாமிகளது திருச்சிவபுரம் நட்டபாடைத்
திருவராகப் பதிகம் 1 - 2 - 3 திருப்பாசுரங்களில் விரிவாய்க்
காணலாம்.

     பணிவார்கள் - ஆளற்குரியவர் -

“வானகம் ஆண்டு மந்தாகினி........“,
“உலகா ளுறுவீர் தொழுமின்........“
-பதினோராந் திருமுறை-பொன்வண்ணத்தந்தாதி - 12 -14

என்பனவாதி திருவாக்குக்கள் இங்குவைத்துக் காணத்தக்கன.

     தாள் பணிவார்களே உலகாளுதற்கு உரியார் என்ற
இக்கருத்தை மூர்த்தி நாயனார் புராணத்திலே “நிலங் காவலுக்கு
உரிய அரசனைக் கொண்டு வருக!“ என்று ஏவிக் கண்கட்டி
விடப்பெற்ற யானை மூர்த்திநாயனாரைத் தன் பிடரியிலேற்றிக்
கொண்டு வந்தமையாலும், அவர் திருநீறு - கண்டிகை - சடைமுடி
- ஆகிய மூன்று பொருள்களின் துணைகொண்டு ஆண்டமையாலும்,
பிறவற்றாலும் அறியலாம். இக்கருத்தே கழறிற்றறிவார் புராணத்தும்
பிறவிடத்தும் பெறப்படுதல் காண்க. செங்கோல் முடிமன்னன்
ஆணையைத் தேடி அடைந்து அவன் குடைக்கீழ்ச் சிறுமன்னரும்
குடிகளும் ஒதுங்குதல் போல இவ்வடியார்களை எல்லா உலகத்தார்களும் அடைவர் என்பதாம்.

     அதன் இடை அகிலலோசமும் போல்வது என்று கூட்டுக.
அக்காவணத்தின் இடைவெளியெல்லாம் எல்லா உலகமும் சேர்ந்து
குழுமியது போல்வது என்க.

     இடை - பெயர். இடைவெளியான இடப்பரப்பு என்ற
பொருளில் வந்தது. தேவாசிரியனை மேற்பாட்டிலே “ஆயிரம்
பாற்கடல் போல்வது“ என்ற ஆசிரியர் இப்பாட்டிலே அதன் இடை
எங்கும் அக்கடல்களாற் சூழப்பெறும் உலகங்கள் என்றார்.

     தாள் பணிவார் - திருவடியின் நிலையர்களாகிய அடியார்கள்
என்றபடி. அகில லோகமும் ஆளுதல் - உலகில் எல்லா
உயிர்களின்மேலும் வைத்த கருணை நோக்கத்தால் அவர்களைத்
தீமையினின்றும் பாதுகாத்து நல்வழிச் செலுத்துதல். “ஆழ்க தீயது;
எல்லாம் அரன் நாமமே சூழ்க; வையகமுந் துயர் தீர்க“ முதலியவை
காண்க.  4