141. மாசி லாத மணிதிகழ் மேனிமேற்  
  பூசு நீறுபோ லுள்ளும் புனிதர்க
டேசி னாலெத் திசையும் விளக்கினார்
பேச வொண்ணாப் பெருமை பிறங்கினார்.
6

     (இ-ள்.)மாசிலாத........புனிதர்கள் - குற்றமற்ற உருத்திராக்கம்
பூண்ட தமது திருமேனியிலே மேலே பூசிய திருநீற்றின்
தூய்மைபோலவே உள்ளும் புனிதத்தன்மை வாய்ந்தவர்களாம்;
தேசினான்.......விளங்கினார் - இவர்கள் தமது ஒளியினால்
எவ்வுலகங்களையும் விளக்கஞ் செய்வார்கள்; பேச......பிறங்கினார் -
ஆதலின் இவ்வளவென்று வரையறுத்து வாக்கினாற் கூறமுடியாத
பெருமையில் விளங்குபவர்கள்.


     (வி-ரை.) மாசிலாத மணிதிகழ் மேனி - மாசிலாத மேனி
என்றுகூட்டுக. மாசிலாத மணி என்று மணியுடன்
கூட்டியுரைப்பதுமாம். தன்னைப் பூண்டவர்களது மாசுகளை
இல்லையாகச் செய்யும் என்க. அடியவர் திருமேனியில் விளங்கிய
போது மணியானது தனது இயல்பாகிய தூய விளக்கத்தின் மேலாயது
- என்பார் - மணிதிகழ் மேனி என்றார் - மணி திகழ்தற்கு இடமாகிய
மேனி. மணி -
  உருத்திராக்கமணி; உருத்திரமூர்த்தியினுடைய
கண்ணினின்றும் தோன்றியது. ஆதலால் உருத்திர - அக்க - மணி
என்பர். மாசிலாத நீறு என்று கூட்டி உரைப்பதும் ஒன்று. இதன்
விரிவைப் பின்னர் திருஞானசம்பந்தசுவமிகள் புராணம் - 764-ம்
திருப்பாட்டின் கீழ்க்காண்க. நீறுபோல் - மேலே பூசும் நீற்றின்
புனிதம் போல் என்க. “சுத்தம தாவது நீறு“ - தேவாரம். நீற்றின்
தன்மைகளை முன்னர் வரிசை 138-வது பாட்டின்கீழ்க் காண்க.

     உள்ளும் புனிதர்
- எச்ச உம்மை. திருநீற்றின் புனிதத்
தன்மையை உய்த்துணர வைத்ததாம்.

     தேசினால் எத்திசையும் விளக்கினார் -
(உட்புனிதராகையால்) தேசு
- மனத் தூய்மையாலும் அருளினாலும்
உண்டாகும் ஒளி. “ஐந்துமாறு அடக்கியுள்ளார் அரும்பெருஞ்
சோதி“ என்று பின்னர்க் கூறுவதுங் காண்க. நீற்றின் தேசு
என்பாருமுளர்.

     பேசவொண்ணாப் பெருமை - “அளவில்லாத பெருமையர்“
என்று பாயிரத்திற் கூறியதின்கீழ்க் காண்க. இங்குத் திருநீற்றினாலும்,
உட்புனிதத்தாலும் உளதாம் பெருமை. இது அளவிடற்கரியதாதலின்
“பேச வொண்ணாப் பெருமை“ என்றார்.

“பேணியணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு“

என்பது தேவாரம்.

    பெருமை பிறங்கினார் - பெருமையிலே விளங்குகின்றவர்கள்.

     இவ்விரண்டு பாட்டுக்களில் முதற்பாட்டு அகப்பெருமையும்,
இரண்டாம் பாட்டுப் புறப்பொலிவையும் விளக்கியதாம். 6