147. கங்கையு மதியும் பாம்புங் கடுக்கையு முடிமேல்
                                  வைத்த
 
  வங்கண ரோலை காட்டி யாண்டவர் தமக்கு நாடு
மங்கையர் வதன சீத மதியிரு மருங்கு மோடிச்
செங்கயல் குழைக ணாடுந் திருமுனைப் பாடி நாடு.
1

     (இ-ள்.) கங்கையும்.........தமக்கு நாடு - கங்கை, நிலா, பாம்பு,
கொன்றை என்ற இவற்றைத் தம்முடியிலே வைத்த சிவபெருமானால்
ஆளோலை காட்டி வலிய ஆட்கொள்ளப்பெற்றவராகிய
ஆலாலசுந்தரர்க்கு (ஆணைவழியே இவ்வுலகில் அவதரிக்க) உரிய
நாடாவது; மங்கையர்.......திருமுனைப்பாடி நாடு- பெண்களின்
குளிர்ந்த சந்திரன் போன்ற முகங்களிலே இருபக்கமும் ஓடிச்சென்று
சிறந்த கயல்மீன்கள் போன்ற கண்கள் காதிலணிந்த குழைகளை
நாடிச் செல்லும் அழகிய பெண்கள் வாழும் திருமுனைப்பாடி நாடு
என்பதாம்.

     (வி-ரை.) வதன மதியில் செங்கயல் குழைகள் நாடும்
மங்கையர் வாழும் திருமுனைப்பாடி நாடு என விரித்துக் கூட்டுக.

     கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் - இறைவன்
திருமுடியிற்றரிப்பன.

     அங்கணர் - அம்+கண்ணர் - அழகிய கண்ணையுடையவர்.
கண் - கருணைக்கண். வரிசை 39-ம் பாட்டின் கீழ்க்காண்க.
அங்கணர் ஆதலின் ஆண்டவர் என்பது குறிப்பு. இவ்வாறு
ஆண்டது திருக்கயிலாயத்திலே போந்த அருட்செய்தியின்
தொடர்ச்சி என்று காட்டுவார் அப்பாட்டிற் கூறிய அப்பெயராலே
இங்கும் கூறினார்.

     கங்கை - உலகம் வாழ்வடையும் பொருட்டுக் கங்கையைத்
தரித்து வானிலிருந்து இவ்வுலகில் ஆறாக உலவ வைத்ததுபோற்
கயிலையிலிருந்து ஆலால சுந்தரரை உலகில் வந்து அவதரிக்கச்
செய்து உலகை வாழ்விக்கச் செய்த சரிதக் குறிப்பாம்.

     மதியும் பாம்பும் - “பாம்போடு திங்கள் பகைதீர்த்து
ஆண்டு“ ஒரு சேர வைத்ததுபோல் பரவையார் சங்கிலியார்களின்
ஊடல் தீர்த்து ஆலாலசுந்தரருடன் வைத்த சரிதக் குறிப்பு.

     கடுக்கை - கொன்றை, பிரணவ உருவமுடையதாதலின் மந்திர
சொரூபமாகிய திருத்தொண்டத்தொகையாதி தேவாரங்களை உலகிலே
தோற்றுவிக்கச் செய்யும் பேருபகாரம் என்ற குறிப்பும் பெறுகின்றோம்.

     ஓலைகாட்டி ஆண்டவர் - இப்பகுதியிற் கூறும் சரித
உட்குறிப்பும் முற்குறிப்புமாம். ஆண்டவர் - ஆளப்பெற்றவர் -
செயப்பாட்டுவினைப் பொருளில் வந்தது.

     ஆண்டவர் தமக்குநாடு - அவருக்கு அவதார உரிமையான
நாடாகியது. ஓலைகாட்டி ஆண்ட செய்தி பின்னர் உரைப்பாராயினும்
அது இப்புராணம் பாடு
தற்கு முன் காலத்தே நிகழ்ந்ததாதலின் ஓலை
காட்டியாண்டவர் - என இறந்த காலத்தாற் கூறினார்.

     வதன மதி - செங்கயல் குழைகள் நாடும் - நாடு - நாடும்
மங்கையர் வாழ்கின்ற திருமுனைப்பாடி நாடு என்க. வதனமதி
என்பதற்கேற்பக் கயல் - கண்களையும், குழை - அவற்றை யணிந்த
காதுகளையும் குறிக்கும். இது கண்கள் நீண்டிருத்தலைக்
கூறியபடியாம். இது பெண்களின் அழகிலக்கணங்களில் ஒன்று.
சீதமதி என்று தண் நீர்மை குறித்ததால் கயல்களும் குழைகளும்
இருத்தல் இயல்பென வருணித்தவாறு. குழைகள் மகரவடிவாக
அமைக்கப்பெறுமாதலின் கயல் மகரங்களை உறவு
கொண்டாடுவதுபோலும் என்ற அழகும் பெறுகின்றோம். அன்றியும்
இப்பகுதியிலே பின்னர்ச் சரித நிகழ்ச்சியிற் பரவையார் ஆரூர்
நம்பிகளைப் “பண்டைவிதி கடைகூட்டக்“ கண்களாற் கண்டபின்
“எதிர் வந்தவர் யார்?“ என்று சேடியை வினவி அவள் சொல்லத்
தமது காதுகள் மூலம் அறிந்துகொண்டாராகும். காட்சித் துறையிலே
கண்ணால் தலைவனைக் கண்ட தலைவி, பின்னர் அவனை இன்னார்
என்று காதாற்கேட்டறிந்து அன்புசெய்வள். ஆதலின் கண்கள்
காதுகளை நாடிற்று என்ற குறிப்பை இச்சரித நிகழ்ச்சியிற்
காண்போம். அன்றியும் நாட்டின் பொலிவை அதில் வாழ்வாரது
பொலிவினால் அறிவித்தலும் இயல்பாம். இவ்வாறன்றி அழகிய
பெண்களோடு நாட்டை வருணித்தலின் ஆசிரியர்
பெண்ணின்பெருமை பேசினார் என்றும் பிறவும் கூறுவன எவையும்
இங்குப் பொருந்தாதன. அது இப்புராண நோக்கங்களில் ஒன்றன்று;
பெண்ணேயாயினும் ஆணேயாயினும் சிவபெருமானிடிடத்தும் அவன்
அடியாரிடத்தும் உள்ள அன்பின் பெருமை கூறுதலே
இப்புராணத்தின் நோக்கம் ஆதலின் என்க.

     திருமுனைப் பாடி நாடு
- “முனைய தரையர்“,
“முனையரையர்“, “முனையர்“ என்ற பேருடைய சிற்றரச மரபினரால்
ஆளப் பெற்றபடியால் “முன்னைப்பாடி“ என்ற பெயராயிற்று;
சோழர்களாண்டது ‘சோழ நாடு' என்பதுபோல. வரிசை 151-வது
பாட்டின் “நரசிங்க முனைய ரென்னு நாடுவாழ் அரசர்“ என்ற
இந்நாட்டு அரசர் பெயரையுங் காண்க. பொது வகையாற்
பார்க்கும்போது இந்நாடு இந் நாளிற் காணும் கூடலூர்ச் சில்லாப்
பிரதேசம் என்று கூறலம். இந்நாட்டின் சிறப்புப், பின்னர்த்
திருநாவுக்கரசு நாயனார் புரணத்திலே கூறுவாராதலின் இங்கு
விரித்துக் கூறவில்லை. முதலிற் கூற நேர்ந்த இவ்விடத்தே கூறாதது
என்னை? எனின், இப்பகுதி தனிச் சரிதம் அல்லாமையானும், இது
பாயிரத்தில் ஒரு பகுதியேயாய் இப்புராணத்திற்கு முன்வரலாறு
சொல்லித் தோற்றுவாய் செய்வது மட்டிலே அமைவதாலும், ஆரூர்
நம்பிகளது முன் வரலாற்றிற் கூறியபடித் திருக்கயிலையே இவரது
இடமாதலாலும், திருத்தொண்டத்தொகையின் வரலாறுகூறும்
இப்பகுதிக்கு உரியது சோழநாடே ஆதலாலும், பிறவாற்றாலும்
இந்நாட்டின் சிறப்பு இங்குக் கூறவில்லை என்க. இப்பாட்டில்
மங்கையர் அழகு கூறியதால் அந்நாட்டு மக்களின் சிறப்பும்,
வரும்பாட்டில் நலத்தான் மிக்க என்றமையால் நாட்டுச் சிறப்பும்
உரியதொருவாகையாற் கூறியதுமாம். 1