158. மணவினைக் கமைந்த செய்கை மாதினைப்
                        பயந்தார் செய்யத்
 
  துணர்மலர்க் கோதைத் தாமச் சுரும்பணை தோளி
                               னானைப்
புணர்மணத் திருநாண் முன்னாட் பொருந்திய
                           விதியி னாலே
பணைமுர சியம்ப வாழ்த்திப் பைம்பொனாண்
                        காப்புச் சேர்த்தார்.
12

     (இ-ள்.) மணவினை........செய்ய - (இவ்வாறு புத்தூரில்)
மணமகளைப் பெற்றவர்கள் மணத்திற்குரிய மங்கலவினைகளைச்
செய்ய; துணர்.........சேர்த்தார்- (திருநாவலூரில்) சேர்கின்ற
திருமணநாளுக்கு முன்னாளிலே முரசு முதலிய மங்கல இயங்கள்
சத்திக்க மலர்மாலைகளை யணிந்த தோள்களுடைய நம்பியாரூரரை
(பெற்றோர்கள்) வாழ்த்தி விதிப்படி பொன் நாணைக்
காப்புக்கட்டுவித்தார்கள்.

     (வி-ரை.) காப்புச் சேர்த்தல் - மணமக்களுக்கு மணத்திற்கு
முன்னாளில் தனித்தனி அவரவர் வீட்டில் மங்கலஞ்செய்து
காப்புக்கட்டுதலாகிய சடங்கு. இரட்சாபந்தனம் என்பது வடநூல்
வழக்கு. இது முதனாளிற் பகலில் நிகழ்வது.

     மணவினைக்கு அமைந்த செய்கை மாதினைப் பயந்தோர்
செய்ய - கல்யாணம் பெண் வீட்டில் நிகழ்வதாகலின் அதற்கு
வேண்டியவை எல்லாம் செய்தல் பெற்றோர் கடமையாம்.

     துணர் மலர்க் கோதை தாமம் சுரும்பு அணை தோளினான்
- இதழ்களை உடைய மலர்களாற் கோதை தாமம் ஆகத்
தொடுத்தனவும் வண்டுகள் மொய்ப்பனவுமாகிய மாலை அணிந்த
தோளுடைய நம்பி. கோதை - தாமம் - மாலை வகைகள். முருக
நாயனார் புராணம் 7-வது பாட்டும் பிறவும் காண்க. சுரும்பு அணை
கோதை என்க. புதுப்பூ மாலையாதலின் சுரும்பு அணைவன.


     புணர் மணத்திருநாள் - மணம்புணர் திருநாள் என்று
மாற்றுக. பொருந்திய விதி - இந்தச் சடங்கிற்கு ஏற்ற நூல்விதி.

     பணைமுரசு - பெருத்தமுரசு. மணமுரசு. ஒருவகை வாத்திய
விசேடமுமாம். முதன்மை பற்றி முரசு கூறவே ஏனைய இயங்களையும்
கொள்க. பணை - பண்ணை எனக் கொண்டு மற்றைய பலவும்
கூடிய என்றுரைத்தலுமாம்.

     பொன் நாண் - பொற்கயிறு. காப்புச் சேர்த்தல் - காவலாக
மணமகனுக்கு வலது கையிலும் மணமகளுக்கு இடது கையிலும் கயிறு
கட்டுதல். அதுமுதல் மணம் முடிந்து காப்பவிழ்க்கும் வரை
மணமக்களை ஏந்தத் தீமையும் அணுகாதபடி காவல் செய்வதாகலின்
காப்பு எனப் பெறும். திருநீற்றுக்காப்பு முதலிய காப்புக்களிலிருந்து
பிரித்து அறிதற்பொருட்டுப் பொன் நாண் காப்பு என்றார். முன்னர்
“மாதினைப் பயந்தார் செய்ய“ என்று பிரித்துக் கூறினமையால்,
சேர்த்தார் - என்பதற்கு மணமகனைப் பெற்றார் என்ற எழுவாய்
வருவித்துரைக்கப் பெற்றது.

“..........வேறுபல காப்பு மிகை“ - திருநா - புரா - 43
 
“........வரையுறை கடவுட் காப்பு மறக்குடி மரபிற்றங்கள்
புரையில் தொன்மரபுக் கேற்பப் பொருந்துவ.....“
                          - கண் - புரா - 18

முதலியவை காண்க.

     துணைமலர்
- என்பதும் பாடம். 12