165. மன்னவர் திருவுந் தங்கள் வைதிகத் திருவும் பொங்க
நன்னகர் விழவு கொள்ள நம்பியா ரூரர் நாதன்
 
  றன்னடி மனத்துட் கொண்டு தகுந்திரு நீறு சாத்திப்
பொன்னணி மணியார் யோகப் புரவிமேற் கொண்டு
                                 போந்தார்.

     (இ-ள்.) மன்னவர்.........பொங்க - (மேற் சொல்லியபடி)
அரசர் பெருங்கோலத்தின் அழகிய காட்சியும் தமக்குரிய வைதிகப்
பெருங் கோலத்தின் அழகிய காட்சியும் மேன்மேலும் கூடிக்
கண்டாரை விரும்பும்படிச் செய்ய; நன்னகர் விழவு கொள்ள -
அந்நகர் முழுதும் மணவிழாக் கொண்டாடவும்; நம்பி.......சாத்தி -
இறைவனது திருவடிகளைத் தம் மனத்திலே எண்ணித் திருநீறு
அணிந்து கொண்டவராய்; பொன்.......போந்தார் - பொன்னால்
அழகாக அலங்கரிக்கப் பெற்ற நல்லிலக்கணங்களுடன் கூடிய
குதிரையின்மேல் ஏறிச் சென்றார்.

     (வி-ரை.) திரு - கண்டாரால் விரும்பப்படும் தன்மை
நோக்கம் - இங்கே நம்பி ஆரூரரினது இருதிறக் காட்சியும்
கண்டாரை விரும்பச் செய்தன என்பார் இருதிருவும் பொங்க
என்றார்.

     தங்கள - மன்னவர் திருவானது தங்களுக்கு
உரித்தல்லாமையாலும், அரசர் காதற் பிள்ளையாய்க்
கொண்டதனாலே மட்டும் பெற்றமையானும், தங்கள் என்பதனை
வைதிகத்திருவுடன் சேர்த்துக் கூறினார்.

     மன்னவர்திரு - தாமம் - கலன்கள் முதலியன. இதனை
மேற்பாட்டிற் கூறினார். வைதிகத்திரு - முந்நூல் - பவித்திரம்
முதலியன. இதனை அதற்கு மேற்பாட்டிற் கூறினார். இவ்விரண்டும்
ஒன்று சேர்ந்து நம்பிகளிடத்துப் பொருந்தியமையால் குளகமாக்கி
அவ்விரண்டு பாட்டுக்களையும் ஒன்றாய்ச்சேர்த்து முடித்தார்.

     புரவிமேல் கொண்டு - மணமகன் குதிரையின்மீது போந்து
மணவீட்டுக்கு வருதல் அந்நாள் வழக்கு. இந்நாளிலும் சில
கூட்டங்களில் இவ்வழக்கம் உண்டு.

     யோகப்புரவி - யோகம் - கூடுதல். நற்சுழி - முதலிய
நல்லிலக்கணங்கள் எல்லாம் கூடிய. சுபத்தை விளைக்கும்
சுழிகளையுடைய. சரியையாதி நாற்பாதத்துள்ளும் நம்பியாரூரர்
யோகபாதத்தை விளக்கவந்த மூர்த்திகளாதலும் குறிப்புப்போலும்.
யோகநிலையை வாசி - பரி - புரவி - என்று குறிப்பர்
திருமூலதேவர்.

     தகுந் திருநீறு சாத்தி - மேலே சொல்லிய
இருவகைத்திருவுக்கும் வேறாய்; அவற்றிற்கு மேற்பட்டு, அவற்றை
அணிந்த பின்னர் மேலே அணியத்தகுவதாய், இறைவன்
திருவடிநினைவுடன் அவனது நாமமந்திரத்துடன் அணியத்தகுவதாய்,
உள்ள ஏற்றங் கருதித் தகும் திருநீறு - என்றார். மேலே
சொல்லியவை பிறர் சாத்தத் தாம் அணிந்தனர். அவ்வாறன்றித்
திருநீற்றைத் தாமே விதிப்படி அணிந்தனர். ஏனையவற்றினும்பார்க்க
இவர்க்கு இதுமிகத் தகுவதென்றலுமாம் என்க. திருமலையில்
இறைவனுக்கு நீறு எடுத்து அணைவாராயினமையும் குறிக்கும்.

     அடிமனத்துட் கொண்டு - ஆட்கொள்ள நின்ற சரிதத்தின்
முற்குறிப்பு. அடிகளை உட்கொண்டு புரவி மேற்கொண்டு என்ற
சுவையையும் குறிப்பையும்காண்க.