167. மங்கல கீத நாத மறையவர் குழாங்க ளோடு
 
 

தொங்கலும் விரையுஞ் சூழ்ந்த மைந்தருந் துவன்றிச்
                                     சூதும்
பங்கய முகையுஞ் சாய்த்துப் பணைத்தெழுந்
                             தணியின் மிக்க
குங்கும முலையி னாரும் பரந்தெழு கொள்கைத்
                                     தாகி.

21

     (இ-ள்.) மங்கல.......ஓடு - மங்கலமாகிய கீதங்களையும் நாதமே
உருவாகிய மறைகளையும் பாடும் பிரமாணர் கூட்டங்களுடன்;
தொங்கலும்........முலையினாரும் - மலர் மாலைகளையும் பொன்
அரிமாலைகளையும் வேறு வாசனைகளையும்அணிந்த ஆடவர்களும்
நெருங்கிப் பணைத்துஎழுந்து தாமரை யரும்பையும்
சூதாடுகருவியையும் வென்று, அணிகளையும் குங்குமப்பூக்
குழம்பையுமணிந்த தனங்களையுடைய பெண்களும் கூடி; பரந்து எழு
கொள்கைத்தாகி - மிக்கெழுந்த தன்மையுடனே,

     (வி-ரை.) இப்பாட்டுக் குளகம். கொள்கைத்தாகி அருங்கடி
எழுந்த போதில் பொலிந்தது - என வரும் பாட்டுடன் கூட்டி
முடிக்க.

     மங்கல கீத நாத மறையவர் குழாங்கள் - மங்கல கீத
மறையவரும், நாத (வேத) மறையவரும் ஆகிய கூட்டங்கள் எனப்
பிரித்துக் கூட்டுக. கீதநாதம் - “மறையினொலி கீதமொடு
பாடுவன....“என்ற தேவாரமும் காண்க. (திருஞான - சாதாரி -
திருப்பட்டீச்சரம் - 6) இவ்விரண்டனையும் பாடுவோர் வெவ்வேறு
கூட்டத்தினராதலின் குழாங்கள் என்று பன்மையிற் கூறினார்.
மங்கலகீதம் - பொருளாலும் பாடும் இசையினாலும் மங்கலமுடைய
கீதங்கள். இவை தமிழ்க் கீதங்கள். வரிசை 87-ம் பாட்டின்கீழ்
காண்க. (பக். 105). இவை இசையால் மங்கலமுடைமையாவது:
இச்சமயங்களில் சோகச்சுவை தரும் மோகனம் முகாரி போன்ற
இராகங்களிற் பாடலாகாதென்பது முதலிய விதிகளின்படிப் பாடுதல்.
நாதம் - இங்கு நாத உருவாகிய வேதங்களைக் குறித்தது.
வேதத்திலும் மங்கல சாகைகள் - அமங்கல சாகைகள் உண்டு.
ஆதலின் மங்கலம் என்றதை நாதத்திற்கும் சேர்க்க. இவ்வாறன்றி
மங்கல கீதங்களையுடைய நாதம் என்று ஒன்று சேர்த்து
உரைப்பதுமாம். “வேதத்தை மங்கலத்துக்குரிய கீத வோசையோடு
ஓதும் மறையவர்“ என்பது இராமநாதச் செட்டியார் உரைக்குறிப்பு.
தொங்கல் - பொன்மாலை முதலிய அணி. விரை - வாசனையுடைய
மலர்மாலையும் பிற வாசனைப் பண்டங்களும் என்றும் உரைப்பர்.
வாசனைப் பண்டங்கள் ஐந்து என்பர்.

      துவன்றிப் - பரந்து - என்று கூட்டுக. துவன்றி - நெருங்கி.
இதனைத் துவன்றி எழுந்து மிக்க - முலை - என்று கூட்டியும்
உரைப்பர். “ஈர்க்கிடை போகா இளமுலை“ என்பது திருவாசகம்.
“இடையீர் போகா விளமுலை“ என்பது தேவாரம். பணைத்து எழுதல்
- நெருங்கி நிமிர்ந்து எழுதல்.

     சாய்த்து - வெற்றி கொண்டதனால் தலை வணங்கப்பண்ணி;
உருவம் - திரட்சி - குவிவு - நிறம் முதலியவைகளால் மிக்கிருத்தல்.
சாய்த்து - எழுந்து - மிக்க என்பதாம்.

     சூது - சூதாடு கருவி வகைகளில் ஒன்று. ஆகு பெயர்.
அணியின் மிக்க - அவற்றின்மேல் அணிந்த அணிகளினும் அழகு
மிகுந்த என்றலுமாம். மைந்தரும் முலையினாரும் துவன்றிப் பரந்து
எழுகொள்கையை உடையதாய் - கொள்கை - ஈண்டுத் தன்மையை
உணர்த்திற்று. வரிசை 156 பாட்டு உரை காண்க.

      குழாங்கள் சூழ்ந்து - என்பதும் பாடம்.   21