168. |
அருங்கடி
யெழுந்த போதி னார்த்தவெள் வளைக
ளாலும்
|
|
|
இருங்குழை மகரத் தாலு மிலங்கொளி மணிக ளாலும்
நெருங்கிய பீலிச் சோலை நீனிறத் தரங்கத் தாலுங்
கருங்கடல் கிளர்ந்த தென்னக் காட்சியிற் பொலிந்த
தன்றே. |
22 |
(இ-ள்.)
அருங்கடி எழுந்தபோதில் - அரிய திருமண எழுச்சி
புறப்பட்டபோது; ஆர்த்த........தரங்கத்தாலும் - சத்தித்த வெள்ளிய
சங்குவளைகளாலும், பெருமையுடைய குழை மகரங்களினாலும், ஒளி
விளங்கு மணிகளினாலும் நெருங்கி ஏந்திச் சென்ற மயிற்பீலிக்
குஞ்சங்களின் நீலநிறமுடைய அலைகளினாலும்;
கருங்கடல்........பொலிந்தது அன்றே - அந்நாளிலே (அப்போதே)
கரிய கடல் கிளர்ந்து செல்லும் காட்சிபோல விளங்கிற்று.
(வி-ரை.)
இப்பாட்டு மண எழுச்சிக்கும் கருங்கடற்
கிளர்ச்சிக்கும் சிலேடை.
கடி
- மணம். இங்கு மணக்கூட்டத்தைக் குறித்தது ஆகுபெயர்.
மணஎழுச்சி - ஆர்த்த வெள்வளைகள் - பெண்கள் அணிந்த
ஒலியுடைய சங்கு வளையல்கள். குழைமகரம் - மகரக் குழை.
ஆண்மக்கள் அணிந்த மகர வடிவுடைய குண்டலங்கள். இது ஆதி
சைவருக்கு உரிய காதணியாம்.பெண்கள் அணிந்த காதணியின்
மகரங்கள் என்றுமுரைப்பார். இலங்கொளி மணிகள் - இவ்விருவரும்
சிறார்களும் பூண்ட அணிகளிலுள்ள ஒளி விளங்கும் மணிகள்.
ஒளியிலங்கு என்று மாற்றுக. நெருங்கிய பீலிச்சோலை நீல்நிறத்
தரங்கம் - நீலநிறமுடைய அலைபோல நெருங்கித் தாங்கிய
மயிற்பீலிக் குஞ்சங்கள்.
கருங்கடல் - ஆர்த்த வெள்வளைகள் - நாதவொலியைத்
தம்முள் அடக்கி ஒலிக்கும் வெண் சங்குகள். சூல்கொண்டு
வயிறுளைந்து சத்தித்தனவுமாம். இருங்குழை மகரம் - பெரிய
வாயினையுடைய பெரிய மகர மீன்கள். பீலிச்சோலை நீல்
நிறத்தரங்கம் - மயிற்பீலிக் குஞ்சங்களின் வரிசையை ஒத்த
கருநிறமுடைய அலைகள். பிறாண்டும் இது போலவே
ஆசிரியர் கடலுக்குக் கூட்டத்தை உவமித்ததையும் காணலாம்.
இரண்டுநில வின்கடல்கள் ஒன்றாகி எழுந்தனபோல்
இசைந்த
வன்றே முதலிய திருப்பாடல்களைக் காண்க. இதுபின்னர்
முற்றுப்பெறாத மணமாய் முடிதலின் கடலின் கருமைபற்றிச் சிலேடை
சொல்லியது குறிப்பாம். மெய்ப்பொருள் நாயனார்புராணம் - 8
(வரிசை 474) பாட்டின்கீழ்க் காண்க. கற்பனையாகக் காட்டும்
கடல்களின் வேறு பிரித்துணர்தற்குக் கருங்கடல் என்றார்.
நீலநீர்த் தரங்கம் - என்பதும் பாடம். 22
|