176. காதிலணி கண்டிகை வடிந்தகுழை தாழச்  
  சோதிமணி மார்பின்மிசை நூலினொடு தோளின்
மீதுபுனை யுத்தரிய வெண்டுகி னுடங்க
ஆதப மறைக்குடை யணிக்கரம் விளங்க.
30

     (இ-ள்.) காதில்.......தாழ - காதிலே உருத்திராக்கத்தாலாகிய
குழைகள் தாழ்ந்து விளங்கவும்; சோதி.........நுடங்க - ஒளியும் அழகும்
பொருந்தியமார்பின் மேலே அணிந்த பூணூலுடன் தோளின்மேல்
உத்தரியமாக வணிந்த வெள்ளிய துகிலும் அசைந்து விளங்கவும்;
ஆதப மணிக்குடை.......விளங்க - கையிலே வெயிலை மறைக்கும்
மறையாகிய குடை விளங்கவும்;

     (வி-ரை.) கண்டிகை - உருத்திராக்கமணிகளாலகிய வடம்.
கண்டிகையாகிய குழை என்க. உருத்திராக்கத்தைக் காதிலே
குழையாக அணிவது சைவமரபு. ஆறுகட்டி - என்பர். வடிந்த
குழை
- தொங்கிய குழை. வடிந்த காதில் என்பதுமாம். தொங்கிய
காதிலே குழைகள் தாழும்படி அணிதல் முன்னாள் வழக்கு. இரண்டு
கந்திருவர்கள் குழை வடிவாகச் சிவபெருமான் காதிலே
அமர்ந்துள்ளார்கள் என்பது சரிதம்.

     சோதி மணிமார்பு - திருநீற்றினால் ஒளியும்
கண்டிகையினால் அழகும் - உடைய மார்பு. தோளிலிருந்து
மார்பிலே கிடந்த நூலும் துகிலும் அசைய. தோளிலே நூல்
தோற்றாது உத்தரியத்தின் கீழ்க்கிடத்தலால் தோளின்மீது புனை
என்பதனை உத்தரியத்துடன் சேர்த்துக் கூறினார். கழல் தள்ளு
நடை கொள்ள
- எனப் பின்னர்க் கூறுவதால் தலையும் மார்பும்
மேனியும் அசைந்தன; அவை அசையவே நரைமுடி சழங்கிற்று;
நூலும் துகிலும் நுடங்கின.

     ஆதப மறைக்குடை - ஆதபன் - ஆதவன் - சூரியன்.
“அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்“ என்றது போலச்
சூரிய கிரணத்தினின்றும் சாக்கும் மறையாகிய குடை. மறையே
இறைவனுக்கு எல்லாமாம் என்பது சாத்திரம். “மறையே நமது
கோவணமாம்...“ என்ற திருவிளையாடற் புராணம் காண்க.
மறைக்கின்ற தொழிலுடைமையால் மறைக்கு அப்பெயராயிற்று.
ஆதலின் மறைக்குடை என்ற நயம்பெற அப்பெயராற் கூறினார்.
இது இவ்வாறு மறைப்பது உயிர்களைப் பிறவி வெயிலிலிருந்து
மறைத்துக் காத்தற் பொருட்டாம். கரம் - கரத்திலே. இறைவன்
கையிலே கொண்டு திருமுடிமேற் கவித்த குடையின் சிறப்பை,

“பூமே லயனறியா மோலிப் புறத்ததே
நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம்“
- பதினோராந் திருமுறை . கோயினான்மணிமாலை - 1

என்ற திருப்பாட்டாலறிக.

மறைக்குடை - மறைக்கின்ற குடை என்பாரு முண்டு.

மார்பினசை - என்பதும் பாடம். 30