177. பண்டிசரி கோவண வுடைப்பழமை கூரக்  
  கொண்டதொர் சழங்கலுடை யார்ந்தழகு கொள்ள
வெண்டுகி லுடன்குசை முடிந்துவிடு வேணுத்
தண்டொருகை கொண்டுகழ றள்ளுநடை கொள்ள.
31

     (இ-ள்.) பண்டி...கூர - வயிற்றிலிருந்து சரிந்த கோவண
உடையினது பழைமை மிகும்படி அதன்மேல் அணிந்துகொண்ட
அசைந்த உடை பொருந்தி நின்று அழகு செய்யவும்; வெண்
துகில்...கொள்ள - வெள்ளை ஆடையும் தருப்பையும் நுனியிலே
முடிந்துவிட்ட மூங்கிற்றண்டு மற்றொரு கையிலே தாங்கிக் கொண்டு,
வரும்போது கால்கள் மூப்பினால் நிலைபெறாது தள்ளாடிய
நடைகொள்ளவும்,

     (வி-ரை.) இப்பாட்டும் வரும்பாட்டும் இறைவன் தாங்கிவந்த,
மனைவியின்றிக் கொண்ட வானப்பிரத்த நிலைக் கோலத்தை
உணர்த்தின. வானப்பிரத்தமிரண்டனுள் இதனை விபத்தினீக வானப்
பிரத்த ஆச்சிரமமென்பர் வடநூலார். மூப்புக் கோலத்திற் கேற்பப்
பண்டிசரி கோவணம் என்றார்.

     கோவணம் - மறையே இறைவனது கோவணமாம். இறையும்
மறையும் முன்னைப் பழம்பொருள்களாதலால் கோவண
வுடைப்பழமை என்றார்.

“மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ“

என்பது திருவாசகம்.

“ஓங்கு கோவணப் பெருமையை யுள்ளவா றுமக்கே
ஈங்கு நான்சொல்ல வேண்டுவதில்லை“

                             அமர்நீதி - புரா - 14

     சழுங்கலுடை - கோவண உடையும் அதற்கேற்ப அதன்மேல்
அணிந்த அசைகின்ற ஆடையும் என்க. “அருமறைநூற்
கோவணத்தின் மிசை அசையுந் திருவுடையும்“ (மானக் - புரா - 24).
திருமேனி அசைவினால் தளர்ந்து வழிகின்ற ஆடை.

     ஒருகை - குடை ஒருகையிற்கொண்டு மற்றொரு கையிலே
தண்டுகொண்டு என்க. இது தள்ளாடிய நடைக்கு ஊன்று கோலாகவும்
துகிலுக்கும் குசைக்கும் இடமாகவும் உதவுவதாம். குசை - தருப்பை. 31