179. வந்துதிரு மாமறை மணத்தொழி றொடங்கும்  
  பந்தரிடை நம்பியெதிர் பன்னுசபை முன்னின்
றிந்தமொழி கேண்மினெதிர் யாவர்களு
                             மென்றான்
முந்தைமறை யாயிர மொழிந்ததிரு வாயான்.
33

     (இ-ள்.) வந்து...நின்று - (அவ்வாறு எய்தி) வந்து மணந்
தொடங்கும் பந்தரிலே நம்பியாரூரர் எதிரிலே சபையின் முன்னர்
நின்றுகொண்டு; முந்தை...வாயான் - பழமையாகிய அளவில்லாத
வேதங்களைச் சொல்லிய வாயினையுடைய சிவபெருமான்;
இந்த...என்றான் - “யாவர்களும் யான் சொல்லப்போகிற இந்த
மொழிகளைக் கேளுங்கள்!“ என்று சொன்னார்.

     (வி-ரை.) எய்த - சழங்க - (29) - தாழ - நுடங்க - விளங்க
- (30) - கூர - கொள்ள - கொள்ள - (31) - எய்தி - (32) - வந்து
- நின்று - வாயான் என்றான் (33) என முடிவு செய்க.

     திருமாமறை மணத்தொழில் - வேத மந்திரங்களுடன்
ஆகம விதிப்படி செய்யும் கலியாண முயற்சிகள். வரிசை 173-ல்
மணத்திறம் என்றதும் இது.

     தொடங்கும் பந்தர்
- எனவே தொடங்கினார்களே யன்றி
இதுவரைச் சடங்குகள் ஒன்றும் செய்யப்பெறவில்லை என்பதாம்.

     மறை ஆயிரம் - அனந்த வேதம் - “அநந்தாவை வேதா:“
என்ப பிரமாணம். ஆயிரம் - அளவிலாத - எண்ணிலாத - எனும்
பொருளில் வந்தது. எண்ணுப் பெயரல்ல. “ஆயிரந் தாமரை போலும்
ஆயிரஞ் சேவடி யானும்....“என்பனவாதி திருவாக்குக்கள் காண்க.

     முந்தை மறை - வேதம் நாத உருவுடையதாதலின்
முதன்மையுடையதாம். வரிசை 177-ல் பழைமை என்ற இடத்துக்
காண்க.

     எதிர்
- எதிரிலே. வரிசை 183-ம் பாட்டிலே பின்னர்
“இந்நாவனகர் ஊரன்“ என்று சுட்டுகின்றதும் காண்க.

     நம்பி எதிர் - நம்பிக்கு எதிராக - நம்பிக்கு மாறாக.
எதிர்மொழி என்பது உங்கள் கருத்துக்கெல்லாம் மாறாய் உள்ளது
இந்த மொழி என்று குறிப்பிட்டதுமாம்.    33