183. ‘ஆவதிது கேண்மின்மறை யோரெனடி யானிந்  
  நாவனக ரூரனிது நான்மொழிவ' தென்றான்
தேவரையு மாலயன் முதற்றிருவின் மிக்கோர்
யாவரையும் வேறடிமை யாவுடைய வெம்மான்.
37

     (இ-ள்.) “ஆவது.....மொழிவது“ என்றான் - ‘நான்
சொல்லுவதாவது இதுவே; மறையோர்களே! இந்த நாவலூர்நம்பி
எனது அடிமையாவன்; இதுவே நான் சொல்லவந்த வழக்கு' என்றார்;
தேவரையும்......எம்மான் - தேவர்களையும் பிரம விட்டுணு முதலிய
பெருந்திருவுடையோர் யாவர்களையும் தனியாக அடிமையாக
வுடையானாகிய எம்பெருமான்.

     (வி-ரை.) ஆவது இது - மேலே “முற்ற இது சொல்லுக“
என்றதையே தொடர்ந்து, நம்பி ‘சொல்லுக இது' என்ற இது
இதுவேயாம் என்றார். இதுவே ஆவது - “உலகில் இதுவே எல்லா
உயிர்க்கும் ஆக்கம் தருவது. மற்றவை எல்லாம் அல்லவை“ என்று
கூட்டத்தாரை நோக்கிச் சொல்லி, அதன்மேற் சொல்வாராய்
நம்பியைச் சிறப்புறச் சுட்டி ‘இந்நாலூரன் என் அடியான்' என்று
அநுவதித்துக் கூறினார்.

     வேறடிமை உடைய - (1) வேறு வேறு - தனித்தனி -
அடிமைகளாக உடைய. (2) நம்பிகளை அடிமையாக்கொண்ட
திறத்தினின்று வேறுபட்டதாகிய மற்றொருவகையாலே என்ற குறிப்பு.

     யாவரையும் வேறடிமையா வுடையான் - என்றதனால்
அவரது அளத்தற்கரிய பெருமையையும் அவரால் வலிந்து
வேண்டப்பெற்ற இவரது சிறப்பும் உணர்த்தியவாறு. அவர்கள்
அடிமைத்திறம் வேறு; அவர்கள் தூர அடிமைகள்; “வாய்தல் பற்றித்,
துன்றி நின்றார் தொல்லை வானவர்கூட்டம் பணியறிவான்,
வந்துநின்றாரயனும் திருமாலும்....“ - அப்பர் சுவாமிகள் தேவாரம்.
இவர் அணுக்கத்தொண்டர் என்பதும் குறிப்பு. “இவன் மற்றென்
அடியான் என விலக்கும், சிந்தையால் வந்துன்றிருவடி யடைந்தேன்“
என்ற நம்பிகள் திருப்புன்கூர்த்தேவாரம் இங்கு நினைவுகூரத்தக்கது.37