188. ‘கண்டதோர் வடிவா லுள்ளங் காதல்செய் துருகா
                                 நிற்குங்;
 
  கொண்டதோர் பித்த வார்த்தை கோபமு முடனே
                                யாக்கும்;
உண்டொரா ளோலை யென்னு மதனுண்மை
                         யறிவே' னென்று
தொண்டனா ரோலை காட்டு கென்றனர் துணைவ
                                 னாரை.
42

     (இ-ள்.) ‘கண்டதோர்...அறிவேன்' என்று - ‘நான் கண்ட
இக்கிழவேதியரின் திருவடிவின் அழகிலே ஈடுபட்டு என்மனம்
ஆசையால் உருகுகின்றது; ஆனால் அதற்கு மாறாய், அவர் தாம்
மேற்கொண்ட பித்த வார்த்தைகள் கோபத்தை அதனுடனேயே
ஒருமித்து விளைக்கின்றன; ஆதலின் இவ்விரண்டு வழியிலும் சென்று
விடாமல் ஒரு ஆள் ஓலை உண்டு என்று இவர் சொன்ன அதன்
உண்மையை ஆராய்ந்தறிவேனாக' என்று எண்ணி;
தொண்டனார்......துணைவனாரை - 'ஐயா நீர் சொல்லிய ஆள்
ஓலையைக் காட்டுக' என்று தொண்டனார் (தமது உயிர்த்)
துணைவனாராகிய வேதியரைக் கேட்டனர்.

     (வி-ரை.) கண்டது ஓர் வடிவு - இவரது திருவடிவம்
கண்டாரைக் காதலிக்கச்செய்யும் தன்மை மேலே 29, 32
பாட்டுக்களிற் கூறினார். ‘கண்டார் காதலிக்கும் கணநாத னெங்
காளத்தியாய்' என்பது நம்பிகள் தேவாரம். திருவேடங் கண்டபோதே
அன்புசெய்து மனமுருகும் தன்மையை அணைந்தோர் தன்மையில்
வைத்துச் சைவ சாத்திரம் விதந்து பேசும். இது முன்னைப்
பக்குவமடைந்த உயிர்களுக்கன்றி உண்டாகாது. ஓர் - ஒப்பற்ற.
தனக்குவமை யில்லாதான் வடிவாதலின் ஓர்வடிவு என்றார். வடிவு
கண்டதும் உருகியது முன்தொடர்பு பற்றியாம். நேச முன்கிடந்த
சிந்தை நெகிழ்ச்சி எனமேலே குறித்தது காண்க.

     உண்மையறிவேன் - காதலும் கோபமும் உடனே வரினும்
“காய்த லுவத்தல் அகற்றி ஒரு பொருட்கண், ஆய்தலறிவுடையார்
கண்ணதே“ - என்ற நீதிப்படி காதலுட் படாமலும்,
கோபத்திற்படாமலும் நடுநின்று ஆய்ந்து உண்மையறிவேன் என்று
துணிந்தார்.

     தொண்டனார் - முன்னை நிலையிலே தொண்டு செய்தவர்;
அது காரணமாய்க் கண்டபோதே காதல் செய்து உருகினாராதலின்
அக்குறிப்புத் தோன்றத் தொண்டனார் என்றார். துணைவனார் -
இவர் மையன் மானுடமாய் மயங்கும்வழித் துணை செய்து தடுத்து
ஆட்கொள்ள வந்தவராதலின் துணைவனார் என்றார்.
மாறுபட்டவராகக் காணப்படினும் இணங்கிய துணைவரே என்றபடி.
உயிர்த்துணைவர் என்ற குறிப்புமாம். 42