232. அந்நிலையா ரூரனுணர்ந் ‘தருமறையோ
                             யுன்னடியென்
 
  சென்னியில்வைத் தனை'யென்னத் ‘திசையறியா
                             வகைசெய்த
தென்னுடைய மூப்புக்கா' ணென்றருள
                            வதற்கிசைந்து
தன்முடியப் பால்வைத்தே துயிலமர்ந்தான்
                            றமிழ்நாதன்.
86

     (இ-ள்.) அந்நிலை.......என்ன - அந்த நிலையை நம்பி ஆரூரர்
தெரிந்து அவரை நோக்கி ‘அருமறையோனே! உன் அடிகளை என்
முடிமேல் வைத்தனையே!' என்று சொல்ல; திசை......என்றருள -
அதற்கு அவர் என்னுடைய மூப்பு என்னைத் திசைதெரியாமற்
செய்துவிட்டது' என்று விடைசொல்லவே; அதற்கிசைந்து.......தமிழ்
நாதன் - தமிழ் நாதனாகிய ஆரூரர் அதனைஒப்புக்கொண்டு தமது
திருமுடியை அப்பால் வேறிடத்திலே வைத்துத் துயில் கொண்டார்.

     (வி-ரை.) திசை அறியா வகை செய்தது என்னுடைய
மூப்புக்காண் - உனது முடியிருந்த திசையை என்னை அறியாமற்
செய்துவிட்டது என்னுடைய மூப்பு என்பது வெளிப்பொருள் - காண்
- எனது மூப்பினைக் காண்பாய். இனி, நான்
உன் முடியிற் கால்
வைக்கும் இறைவன்; நீமட்டுமல்ல; எத்திசையில் உள்ள எவர்களும்
என்னை இன்ன தன்மையன் என்றறிய முடியாமற் செய்துவிட்டது
எனது ‘முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம் பொருளாகிய
பழைமை; இதனை நீ (நாம் காட்டக்) காண்பாய்' என்பது உட்பொருள்.

     தன்முடி அப்பால் வைத்தே - மிக மூப்பு அடைந்த அவர்
தாளை அப்புறம் வைக்கச் சொல்லி அவரை வருத்தாது. அவர்
சொன்னதற்கு இசைந்து விட்டாராதலாலே தம்முடியை வேறு புறமாக
வைத்து.

     துயில் அமர்ந்தான் தமிழ் நாதன் - தேவாரத் தமிழ் நாதர்.
நம்பிகள் முன்னர் 'உயர் நாவலர் தனிநாதனை' (வரிசை 223)
என்றதும் காண்க.

     துயிலமர்ந்தான் - துயில் கொண்டருளினார். துயில -
துயில்கொள்ள; அமர்ந்தான் என்றலுமாம். நம்பிகளை முன்னர்
வந்தித்தார், மனங்கொண்டார், புறத்தணைந்தார், மடம் புகுந்தார்,
பள்ளியமர்ந்தருளினார் எனவும், பின்னர்ப் பாடினார் எனவும்,
பன்மையிற் கூறிய ஆசிரியர் இங்கு நம்பிகள் இறைவனை
ஒருமையிலே ஒரு வேதியனாகவே எண்ணிப் பேசும் இடத்துக்
கேற்ப, ஆரூரன் - தன்முடி - அமர்ந்தான் - நாதன் என
ஒருமையிற் பேசியிருத்தல் உய்த்துணரத்தக்கது. 86