235.
|
பொன்றிரளு
மணித்திரளும் பொருநகரிவெண்
கோடுகளும் |
|
|
மின்றிரண்ட
வெண்முத்தும் விரைமலரு
நறுங்குறடும்
வன்றிரைக ளாற்கொணர்ந்து திருவதிகை
வழிபடலாற்
றென்றிசையிற் கங்கையெனுந் திருக்கெடிலந்
திளைத்தாடி. |
89 |
(இ-ள்.)
வெளிப்படை. பொன்னையும், மணிகளையும்,
யானைக்கொம்புகளையும், முத்துக்களையும், மலர்களையும்,
சந்தனக்கட்டைகளையும் அலைகளாற் கொண்டு வந்து திருவதிகையை
வழிபடுகின்றதனாலே தென்றிசைக் கங்கை என்று சொல்லப்பெறும்
திருக்கெடில நதியிலே மகிழ்ந்து மூழ்கி, நம்பிகள்,
(வி-ரை.)
பொன் - மணி - முத்து - மலர் - நறுங்குறடு
-
இவை இறைவனது பூசைக்குரியபண்டங்கள். இவற்றை நீரிலே இட்டு
இறைவனைத் திருமஞ்சனமாட்டி அர்க்கிய பாத்திய ஆசமன
முதலியன கொடுத்து வழிபடுதல் ஆகம விதியாம். யானைக்
கொம்புகள் இறைவன் எழுந்தருளுவற்குப் பல்லக்கு முதலியவை
செய்ய உதவும். இவைகளைத் தனது நீர்ப்பெருக்கிலே கொண்டுவந்து
திருவதிகைத் தலத்தை வழிபடுகின்றது போன்றது கெடிலநதி.
வழிபடல் - வழியிலே செல்லுதல் என்ற பொருளும்
காண்க.
மணி -
பின்னே செல்லும் முத்தும், கடலிலேபடும்
பவளமுமொழிந்த ஏனை இரத்தினங்கள். கங்கையும், இறைவன்
வழிபாட்டிற்கு இமயச்சாரற் பண்டங்களை வாரிக்கொண்டு வந்து,
யாண்டும் யாரும் யாவும் பயன்படுத்துதற்குரியதாய், விளங்குவதோடு
சிவபெருமானது சடையிலும் பெருகி, என்றும்
திருமஞ்சனமாட்டுதலால் கெடிலம் போன்றது என்றார். இமயம்
பொன்மலை என்பர். பொன் முதலியவற்றை வாரிக் கொணர்தலும்
வழிபடுதலும் இரண்டிற்கும் பொதுத் தன்மையாம். கங்கை
வடதிசையில் உள்ளதாதலின் கெடிலத்தைத் ‘தென்றிசையிற்
கங்கையெனும்' என்றார்.
......தென்றிசைக்,
கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே
|
என்ற அப்பர் சுவாமிகள்
திருவாக்கு இங்குப் பொருள் காட்டியவாறு.
‘பொன்னி உம்பர் நாயகர்க் கன்பரும் ஒக்குமால்' என்ற (வரிசை 57)
திருப்பாட்டும் உரையும் இங்கு வைத்துக் காண்க.
பொன்றிரள் - பொற்றூள்
- பொற்சன்னம். பொன்
பிரித்துணரப்படாமல் மணலோடு கலந்து வருதலின் திரள் என்றார்.
மணித்திரள் - பலவகை மணிகளின் தொகுதி.
பல வகையும்
பிரித்துணரப்படாமையானும், முறுக வாங்கிக் கடைந்தெடுக்கப்பட்ட
பின்னரே மணிச்சோதி தோன்றி இன்னவென்று அறியப்படுதலானும்,
அதன்முன்னர் ஆற்றிலே அலைத்து வரும்போது வெறுங்
கற்கூட்டங்களுடன் வைத்தெண்ணப்படுதலானும், மணிகளையும் திரள்
என்றார். எனவே, பொன்னும்மணியும் அறியப்படாத
கூட்டமாயினமையின் திரள் என்ற ஒருமைத் தொகுதியாற்
கூறினாராயிற்று.
முத்து - மலர் - குறடு
- இவை சாதி ஒருமை. இவையும்
தொகுதியாயினும் அறியப்பட்ட கூட்டமாயினமையின், அவ்வாறு திரள்
என்னாது, சாதி ஒருமைத் தொகுதியால் உம்மை கொடுத்துக் கூறினார்.
கோடுகள் - தொகுதியாய் வராது சிலவாய்த்
தனித்தனி எண்ணி
யறியப்படும் தகுதிபற்றிப் பன்மையாற் கூறியபடி.
பொரு கரி -
போர் செய்யும் குணமுடைய யானைகள்.
யானைகள் போர் தொடங்குமாயின் இறக்கும்வரை விடாது போர்
செய்யும் இயல்புடையன. ஆதலின் பொருகரி என்று சிறப்பித்தார்.
வெண்கோடுகளும் மின் திரண்ட வெண்முத்தும்
-
வெள்ளிய யானைக்கொம்புகளும், முழு ஒளியும் பெற்றுத் திரண்டு
விளைந்து அவற்றிலிருந்து வெளிப்பட்ட வெண்முத்துக்களும்.
யானைகள் போர் செய்தலால் ஒடிந்துபட்ட கொம்புகள். முத்துப்
பலவிடத்தும் பிறக்கும். இங்கு வருவன, குறிஞ்சிப் பொருள்களுள்,
யானைக்கொம்பிற் பிறப்பன என்று குறிப்பார், மணித்திரளினின்று
வேறு பிரித்துக் கோடுகளுடன் சேர்த்துக் கூறினார்.
விரைமலரும் நறுங்குறடும்
- வாசனையுடைய புது
மலர்களும், நறுமணங் கமழும் சந்தனக்கட்டைகளும். இவை
இரண்டும் வாசனைப் பொருளும், முன் மூன்றும் (பொன் - மணி -
முத்து) ஒளிப்பொருள்களுமாயின. 89
|
|
|
|