242. மன்று ளாடுமது வின்னசை யாலே
     மறைச்சு ரும்பறை புறத்தின் மருங்கே
 
  குன்று போலுமணி மாமதில் சூழுங்
     குண்ட கழ்க்கமல வண்டலர் கைதைத்
துன்று நீறுபுனை மேனிய வாகித்
     தூய நீறுபுனை தொண்டர்க ளென்னச்
சென்று சென்றுமுரல் கின்றன கண்டு
     சிந்தை யன்பொடு திளைத்தெதிர் சென்றார்.
96

     (இ-ள்.) மன்றுள்.....மருங்கே - திருவம்பலத்திலே ஆடுகின்ற
தேனின் ஆசையால் உள்ளே வேதங்கள் அரற்ற அதன்
வெளிப்பக்கத்தே; குன்றுபோலும்..........வண்டு - மலைபோலுயர்ந்த
மதிலைச் சூழ்ந்து ஆழ்ந்த அகழியின் மலர்ந்த தாமரையிலிருந்த
வண்டுகள்; அலர்கைதை.......ஆகி - மேல்எழுந்து தாழைமலரிற்
செறிந்த மகரந்தத்திலே படிந்த மேனியுடையனவாகி; தூய........கண்டு
- அதனாலே புனிதமாகிய திருநீறு பூசிய சிவனடியார்களைப் போன்ற
தோற்றத்தோடு போய்ப்
போய் முரல்கின்ற காட்சியைக் கண்டு;
சிந்தை........சென்றார் - நம்பிகள் மனத்திலே மிகுந்த அன்பிலே
மூழ்கி மேற்சென்றனர்.

     (வி-ரை.)கடல்வலங் கொள்வதுபோலச் சூழ்ந்த கழியின் காட்சி
நம்பிகளுக்கு மகிழ்ச்சியை விளைத்தது. அதன்மேல் அங்குள்ள
வண்டுகள் நீறுபுனைந்த அடியார்போல முரல்கின்ற காட்சி பேரன்பை
விளைத்தலின் நம்பிகள் அதிலே திளைத்தார்.

     மறைச்சுரும்பு - கமல வண்டு.

“தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே னுண்ணாதே
நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறு மெப்போதும்
அனைத்தெலும் புண்ணெக வானந்தத் தேன்சொரியுங்
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ“

என்று ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் உபதேசித்தருளிய சுரும்பரின்
வழிவழி மரபில் வந்தவை இந்த வண்டுகள். ஆதலின் உள்ளே
மன்றினில் நிறைந்த மதுவை அளவுபடாது உண்ணும் மறைச்சுரும்பர்
எடுத்துப்பாட, அதுபோலவே புறத்தே உள்ள நாமும் செய்வோம்
என்று கமலவண்டு அச்செயலுக்குத் தக்க வேடமாகிய நீறுபூண்டு
அடியார் கோலத்துடன் சென்று சென்று முரல்கின்றன என்பது
குறிப்பு.

     மதுவின் நசையாலே - சிறுசிறு துளியாய்ப் பல பூக்களிற்,
போய் உண்டும் நிரம்பாது நாவிற்கு மட்டும் சிறிதுகாலம் இனிமை
தருவதும், அதிக முண்டால் நோய் தருவதுமான தேனைத் தேடி
அலையாது, பொருந்திரளாக ஒரே இடத்தில் நுகரத்தக்கதாய் எல்லா
இந்திரியங்களுக்கும் உயிருக்கும் எப்போதும் இனிமை தருவதாய்
உள்ள பெருந்தேனை உண்ணுவோம் என்ற நசை. இதுபோன்ற பல
பொருள்களையும் இங்கு உய்த்துணர்க. ‘இம்மலைப் பெருந்தேன்
சூழ்ந்து, மது மலரீக்கண் மொய்த்து மருங்கெழு மொலிகொல்
என்றான்' எனப் பின்னர்க் கண்ணப்ப நாயனார் புராணத்துக் (101)
கூறுவதன் உட்கிடையையும் இங்கு வைத்து உன்னிக் களிகூர்க.
அதன் விரிவு அங்குக் காண்க.

     கமல வண்டு - தாமரைப் பூக்களிற் றேனுண்ட வண்டு.
கைதை - தாழை. இங்குத் தாழையின் பூவை உணர்த்திற்று;
முதற்பெயர் சினைக்காயிற்று. கமலம் மருதப் பொருள்; கைதை
நெய்தற் பொருள்; கமல வண்டு கைதையின் நீற்றைப் புனைதல்
மருதத்திற்கும் நெய்தலுக்கும் திணைமயக்கம் கூறியதென்பர் புலவர்.
தில்லை, மருதமும் நெய்தலும் கூடிய நிலத்துள்ளதும் காண்க.

     கைதை துன்று நீறுபுனை மேனிய ஆகி தூய நீறுபுனை
தொண்டர்கள் என்ன - வண்டுகள் தாழைப் பூவினுட் போந்து
வெளிவரும்போது அதனுட் பொருந்திய மகரந்தம் தமது உடம்பிற்
றோய்ந்து வரும். அப்போது காண்போர்க்கு முழுநீறு பூசிய
அடியவர்களைப் போன்று தோன்றும். கைதையில் துன்றுநீறு -
உண்மையும் தூய்மையுமில்லாத மாயா காரியப் பொருள். ஆனால்
உண்மையான தூய திருநீற்றின் தோற்றம்மட்டும் பொருந்தியது.
ஆதலின் இதனைத் துன்று நீறு எனவும், அதனைத் தூய நீறு
எனவும் கூறினார். பொருள்கள் காண்போரின் மனப்பான்மைக்
கேற்றவாறு நினைவுண்டாக்குதல் இயல்பு. திருவரத்துறை நாதர்
அளித்த முத்துப்பல்லக்கின் ஒளியைக் கண்டபோது ஆளுடைய
பிள்ளையார்க்கு அது திருநீற்றின் ஒளியை நினைவூட்டியது.
“வெண்ணீற்றொளி போற்றி நின்று“ என்பது திருஞானசம்பந்த
சுவாமிகள் புராணம்.

“சேறாடு செங்கழுநீர்த் தாதாடி மதுவுண்டு சிவந்த வண்டு
வேறாய வுருவாகிச் செவ்வழிநற் பண்பாடு மிழலை யாமே.“

என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும் இங்கு நினைவு கூர்க.

     இத்தேவாரத்தில் வேறாயஉரு என்ற கருத்தைத் தொடர்ந்தே
ஆசிரியர் இங்குத் ‘தூயநீறுபுனை தொண்டர்கள்' என்று உவமித்தார்.
மகரந்தம் பூசியநிலை தொண்டர் நிலையினின்று வேறு தன்மையுடைய
தென்க. உண்மைத் தூயநீறு பூசி மகிழ்ந்து பயனடைய அறியாத
இந்நாண்மக்கள் நீற்றின் போலியான பலதூள்களைத் தங்கள்
முகங்களிற் தூவிக் களிப்பர். அவர் இவ்வுவமானத்தின் உட்கருத்தை
உன்னுவார்களாக. இவ்வுவமானத்தில் நீறு பூசுதல் - களித்தல் -
மறைபாடுதல், தொண்டர்க்கும் வண்டுக்கும் பொதுத் தன்மைகளாம்.
இக்கருத்தையே தொடர்ந்து பின்னர்த் ‘தேமருமென் சுரும்பிசையாற்
செழுஞ்சாமம் பாடுமால்' (9) என்று திருஞானசம்பந்த சுவாமிகள்
புராணத்துக் கூறுதல் காண்க. 96