247.
|
ஆடு
தோகைபுடை நாசிக டோறு
மரணி தந்தசுட ராகுதி தோறு |
|
|
மாடு
தாமமணி வாயில்க டோறு
மங்க லக்கலசம் வேதிகை தோறுஞ்
சேடு
கொண்டவொளி தேர்நிரை தோறுஞ்
செந்நெ லன்னமலை சாலைக டோறு
நீடு தண்புனல்கள் பந்தர்க டோறு
நிறைந்த
தேவர்கண நீளிடை தோறும்.
|
101 |
(இ-ள்.)
ஆடு.....தோறும் - கோபுர நாசிப்பக்கங்களில்
எங்கேயும் ஆடுகின்ற மயில்கள்; அரணி........தோறும் - யாகங்களில்
எங்கும் அரணியினாற் கடைந்தெடுக்கப்பெற்ற நெருப்பு;
மாடு.....தோறும் - இருபக்கமும் மாலைகள் தூக்கியன; வாயில்களில்
எல்லாம் திண்ணைகள்தோறும் மங்கலக் கலசங்கள்; சேடு.......தோறும்
- தேர்க்கூட்டங்களிலெங்கும் பெரிய ஒளி; செந்நெல்........தோறும் -
அன்னசாலைகளிலெங்கும் செந்நெல்லரிசிச் சோற்றுமலைகள்;
நீடு........தோறும் - தண்ணீர்ப் பந்தர்களிலெல்லாம் எப்போதும்
நிரம்பிய குளிர்ந்த தண்ணீர் வகைகள்; நிறைந்த........தோறும் -
வீதியின் அயலிடங்களில் எங்கும் நிறைந்த தேவக்கூட்டங்கள்;
(உள்ளன.)
(வி-ரை.)
வினைச்சொல் உள்ளன என்று வருவித்துரைக்க.
திருநாட்டுச் சிறப்பு, வரிசை - 78 முதல் 83 வரை பாட்டுக்கள்
பார்க்க.
திருவீதியிற் புகுந்தவர், மேலே உயரக்கண்ட காட்சி
மேற்பாட்டிற் கூறிய ஆசிரியர் கீழே வீதியிற்காண்பது இப்பாட்டிற்
கூறினார்.
ஆடுதோகை
- மேற்பாட்டிலே பகற்காலங்களிலே
ஓமப்புகையே மேகங் காட்டுவன என்றாராதலின், கார் கண்டு
களிக்கும் மயில்கள் அந்த மேகங்களிற் களித்து, ஓங்கி உயர்ந்த
இடமாகிய கோபுர நாசிகளிலே தங்கி ஆடி மகிழும் என்று இங்குக்
குறித்தார். மயங்கு மாலை நேரங்களிலும் மழைக் காலங்களிலும்
மயில்கள் கோபுர வாயில்களின் மேலே தங்கிக் கூவும் இயற்கை
காண்க. சோலைகளுக்குள்ளே நகரம் விளங்குவதால் மயில்களைக்
கூறினார். நாசி - கோபுர நிலைகளின் மேல் வைக்கப்பெறும்
முகங்கள். ஆடுதல் மயிலுக்குரிய சிறப்பியல்பாதலின் ஆடுதோகை
என்றார். கூவும் குயில்கள் ஆடு மயில்கள் இன்சொற்
கிளிப்பிள்ளை என அவ்வவற்றின் சிறப்பியல்பைத் தொகுத்துக்
கூறும் ஆளுடைய பிள்ளையார் தேவாரம் காண்க. தோகை
அதனையுடைய மயிலுக்கு ஆயிற்று - சினை ஆகுபெயர். ஆடுகின்ற
காலத்து விரிந்து அழகுசெய்வது அதுவேயாதலும் குறிப்பு.
அரணி -
தீக்கடைகோல். மரக்கோலாற் கடைந்து
தீயுண்டாக்குதல் அக்கால வழக்கு. விறகீற்றீயினன்...... முறுக
வாங்கிக் கடைய முன்னிற்குமே என்ற அப்பர் சுவாமிகள்
தேவாரமும், ‘மரக்கடை தீக்கோல் பண்ணி' (கண் - புரா - 99) என்ற
புராணமும் காண்க. வழக்கம் பற்றியும் தூய்மை பற்றியும் இதுவே
யாகங்களிற் கொள்ளப்பெறும். விரிவு ஆகமங்களுட் காண்க.
இவ்வாறன்றி நெருப்பெல்லாமொன்று என்னும் இக்காலத்தார்
நினைப்பு அறியாமையாம். உண்டாகும் இடம் - பற்றி எரியும் விறகு
முதலிய பற்றுக்கோடு - தங்குமிடம் முதலிய வெவ்வேறு
காரணங்களினால் தீயும் வெவ்வேறு குணந் தரும். நவீனத்திற் காணும்
நெருப்புக் குச்சி - மின்சாரம் முதலியவை தோன்றுமிடத்தால் வேறு
வேறு குணம் தருவன. புளிய மரத் தீக்கும் வேப்பமரத் தீக்கும் உள்ள
வேறுபாட்டை மருத்துவ நூல்களுட் காண்க. இவை பற்றுக்கோட்டால்
வரும் வேறுபாடாம். தங்குமிட வகையால் ஈமத் தீக்கும்யாகத் தீக்கும்
உள்ள வேற்றுமை சுருதி, யுக்தி, அனுபவ மூன்றாலும் அறியலாம்.
உம்பர் தொழ எழுஞ் சிவ மந்திர ஓமத்தால், உற்பவித்த
சிவாங்கியினில் (முழுநீறு - புரா - 2) முதலியவை காண்க.
தீக்கடைகோல் வழக்கொழிந்த இந் நாளிலும் சிவ யாகங்களிலே
சூரிய காந்தத்தாலே சூரிய கிரணத்தினின்றும் தீயை எடுத்து வேள்வி
தொடங்கும் வழக்கும் காண்க.
நீடு தேவர் கணம் நீள் இடை தோறும் - ஆகுதிகளைக்
கொள்ளத் - தேவர்கணம் இருக்கும் தொடர்பு பற்றி அடுத்து
வைத்துக் கூறினார்.
மங்கலக் கலசம்
- நிறை குடம். பூரண கும்பம் என்பர்
வடநூலார். வாயில்களிலே தூக்கிய தாமங்களும், வேதிகைகளிலே
மங்கலக் கலசங்களும், தில்லையில் இன்றைக்கும் பார்த்து மகிழும்
காட்சியாய் விளங்குவன. வேதிகை - திண்ணை.
தேர்களில் ஒலி
- தேர்களிலே உள்ள மணி முதலிய
அலங்காரங்களும், உயரத் தூக்கிய பெருவிளக்குகளும் ஆம். இவை
பகலிலும் இரவிலும் தேருக்கும் வீதிக்கும் ஒளி தருவன.
செந் நெல்
- குணம் முதலிய விசேட நோக்கிச் செந்நெல்
அன்னம் என்றார். கார்நெல் தாழ்ந்ததாம். இதன் விரிவை
அரிவாட்டாய நாயனார் புராணத்துட் காண்க.
அன்ன மலை சாலை
- மலைபோன்ற அளவிற் சமைத்து
அளிக்கும் அன்னசாலை. தில்லையிலே இப்பெருமை இன்றும்
கண்ணாரக் காணக்கிடைப்பதாம். இஃது அன்னம் பாலிக்கும்
தில்லைச்சிற்றம்பலம் என்ற அப்பர் சுவாமிகளின் ஆசியின் பயன்
போலும்.
நீடு தண்புனல்கள் பந்தர்
- தண்புனல்கள் நீடு பந்தர்.
தாகத்திற்கு வேட்பனவாம் பலவகைப்பானங்களைக் குறிக்கப்
புனல்கள் என்று பன்மையாற் கூறினார். குளிர்ந்த நீர்களே
பருகத்தக்கன. இப்போது வழங்கும் கொடிய குடிப்பழக்கமாகக் காபி
முதலிய சூட்டுப்பானங்கள் பருகத் தகாதன என்பது தண்புனல்கள்
என்றதனால் பெற்றாம். புனலேயன்றி வேறு வகைக் குடிகள்
தகாதவையே என்பார் புனல்கள் என்றார். பசியும் தாகமும்
அடுத்தடுத்து உள்ளனவாதலின், அவ்வேட்கைகளைத் தீர்க்க உதவும்
அன்னசாலைகளும் நீர்ச்சாலைகளும், இப்பாட்டிலே அடுத்தடுத்து
வைக்கப்பெற்றன. சோறில்லாத அன்ன சத்திரங்களும் நீரில்லாத
நீர்ப்பந்தர் நீர்த்தொட்டிகளும் மலியக்காணும் இந்நாள்மக்கள்
இக்கருத்துக்களைக் கூர்ந்து நோக்குவார்களாயிற் பயனுண்டாம்.
தேர்நிறை தோறும் - அன்னமலி சாலைகள் - என்பனவும்
பாடங்கள். 101
|
|
|
|