254. தடுத்துமுன் னாண்ட தொண்டனார் முன்பு
     தனிப்பெருந் தாண்டவம் புரிய
 
  வெடுத்தசே வடியா ரருளினார் ‘றரள
     மெறிபுனன் மறிதிரைப் பொன்னி
மடுத்தநீள் வண்ணப் பண்ணையா ரூரில்
     வருகநம் பா'லென வானில்
அடுத்தபோ தினில்வந் தெழுந்ததோர் நாதங்
     கேட்டலு மதுவுணர்ந் தெழுந்தார்.
108

     (இ-ள்.) தடுத்து......அருளினால் - முன்னே தடுத்து
ஆட்கொண்ட நம்பிகள் முன்னர் ஒப்பற்ற பெருங்கூத்துப்புரியத்
தூக்கிய திருவடியுடைய பெருமானது திருவருளினாலே; தரளம்.....என
- ‘முத்துக்களை அலைத்துவரும் காவிரியாற் பெருகிய வளமுடைய
வயல்கள் சூழ்ந்த திருவாரூரிலே நம்மிடம் வருக' என்று;
வானில்.....கேட்டலும் - அப்போது ஆகாயத்தில் வந்து எழுந்ததாகிய
ஒரு நாதத்தைக் கேட்டதும்; அது உணர்ந்து எழுந்தார் - நம்பிகள்
அதனை உணர்ந்து மேலெழுந்தனர்.

     (வி-ரை.) தடுத்து முன் ஆண்ட - முன்னே இறைவனால்
தடுத்து ஆளாகக் கொள்ளப்பெற்ற. ஆண்ட - ஆளப்பெற்ற.
செயப்பாட்டு வினைப் பொருளில் வந்தது. முன் - முன்னாளிலே.
முன்பு - முன்பாக. தாண்டவம் புரிய எடுத்த சேவடியார் -
நித்தியமாக நடம்புரிதற்காகத் தூக்கிய சேவடி. நடனம், காலைப்
பெயர்த்த பின்பே நிகழும்; ஆதலின் தாண்டவம் புரிய எடுத்த -
என்றார். வேறு செயல்களின் பொருட்டும் அடிபெயர்த்தல்
உளதாதலின் அவற்றினின்றும் பிரிக்கத் தாண்டவம் புரிய என்றபடி.

     தனிப்பெரும் - நித்தியமாய் எங்கும் நிகழும்
நடனமேயாயினும் அன்று நம்பிகள் முன்பு விசேடமாய் ஆடிய கூத்து
என்பார் தனிப்பெரும் என்ற அடைகொடுத்துக் கூறினார். ஒப்பற்ற
பெருங் கூத்து என்க. “ஆனந்த எல்லையில் தனிப்பெருங் கூத்து“,
“திருநடம்“ என முன்னர்க் கூறியதும் காண்க.

     வானில் அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் -
வானில் - நாதம் எழுந்த இடத்தையும், அடுத்த போதினில் - எழுந்த
காலத்தையும் குறிக்கும். அடுத்த போதினில் - பணிந்ததற்கு அடுத்த
காலத்திலே - அதிவிரைவிலே - பணிந்தவுடனே.

     உணர்ந்தெழுந்தார் - பணிந்தவர் எழுவதற்கு முன்னே நாதம்
எழுந்தது. அதனைக்கேட்டு உணர்ந்த பின்னர் நம்பிகள் எழுந்தார்.

     வானில் நாதம் எழுதலும்
- ஆசிரியர் இப்புராணம் பாடுதற்கு
நடராசர் முதலெடுத்துக கொடுத்ததனை “வெருளின் மெய்ம்மொழி
வானிழல் கூறிய பொருள்“ (வரிசை 9) என்று பாராட்டி யிருத்தலை
இங்கு வைத்துக் காண்க.

     வானில் - சித்ஆகாயம்
- ஞானாகாயம் எனக் கொண்டு,
சிதாகாயத்திலிருந்து கிளம்பிய நாதம், அடு அடுத்துத் தொழில்
செய்யும் இடமாகிய தியானத் தலமாம் இதய குகை (போது - இதய
கமலம்) யில் வந்தெழுந்தது என்றுரைத்தலுமாம். இப்பொருளில்
அடுத்த போதினில் - ஞானாகாயம் அடுத்து நிறைந்த இடமாகிய
தாமரைமொட்டு (போது) ப்போன்ற இருதயமலரில் வந்துஎழுந்த
நாதம் என்றுரைக்க.

     எழுந்தார் - திளைத்து மலர்ந்து அழுந்திய
சிவானுபவத்திலிருந்து எழுந்தார் - என்றும், பணிந்தவர் (107)
அந்நிலையினின்றும் எழுந்தார் என்றும் உரைக்க.

     கேட்டலும் - முன், ஐந்து அறிவுங் கண்களேகொள்ள இருந்த
நிலையிலிருந்து எழுந்து கேட்டல்மூலம் அறிவு வெளிப்பட்டது.
இறைவன் நாதம் கேட்பிக்க நம்பிகள் கேட்டார்.

     உணர்ந்து - கரண நான்கும் சிந்தையேயாக இருந்த
நிலையிலிருந்து எழுந்தாராதலின் புத்திதத்துவம் தொழிற்படவே
உணர்ந்து என்றார். 108