259. மண்டியபே ரன்பினால் வன்றொண்டர்
                           நின்றிறைஞ்சித்
 
  ‘தெண்டிரைவே லையின்மிதந்த திருத்தோணி
                             புரத்தாரைக்
கண்டுகொண்டேன் கயிலையினில் வீற்றிருந்த
                             படி'யென்று
பண்டருமின் னிசைபயின்ற திருப்பதிகம்
                              பாடினார்.
113

     (இ-ள்.) மண்டிய.....இறைஞ்சி - நம்பிகளும் மிக்கெழுந்த
பேரன்பினாலே வணங்கி நின்று; தெண்திரை.....பாடினார் -
‘ஊழியிலே கடலில் மிதந்த திருத்தோணிபுரத்தின் இறைவரைக்
கயிலையில் அவர் வீற்றிருக்கும் அப்பரிசே நான் கண்டு வணங்கி
என் மனத்துள்ளே தரிக்க வைத்துக்கொண்டேன்' என்ற கருத்துடைய
பண்ணிரம்பிய இன்னிசையுடைய தக்கேசிப்பண்ணிலமைந்த
திருப்பதிகத்தைப் பாடியருளினார்.


     (வி-ரை.) மண்டிய பேரன்பு - செறிந்து நிறைந்த பேரன்பு.
பிள்ளையாரிடத்தே வைத்த அன்பானது முற்றியவகையாலே தாம்
உள்ளேசென்று இறைவரை வணங்காதிருப்பவும் தம்மை நோக்கி
வெளிவந்து இறைவரே எதிர்காட்சி தரச்செய்ததாதலின் மண்டிய
பேரன்பாயிற்று. முன்னர்த் திருவதிகையிலே ஆளுடைய
அரசுகளினிடத்து வைத்த அன்பு சித்தவட மடத்திலே இறைவனை
எழுந்தருளுவித்துத் (துயிலுநிலையிற்) றிருவடி சூட்டச் செய்தது.
இங்குப் பிள்ளையார்பால் வைத்த அன்பு சாக்கிரத்திலே இறைவன்
தரிசனத்தைக் கூட்டிற்று. ஆதலின் மேலும் மேலும் செறிந்து
நிறைந்தது என்பார் மண்டிய பேர் அன்பு என்றார்.

     நின்றிறைஞ்சி
- இறைஞ்சி நின்று என மாற்றியுரைக்க.

     வேலையின் மிதந்த திருத்தோணி புரத்தாரை
- ஊழிப்
பெருவெள்ளத்திலே ஆழாது மிதந்த காரணத்தாலே
திருத்தோணிபுரம் என்னும் தலத்தில் எழுந்தருளிய இறைவரை.
“கடல்கொள மிதந்த“ என்ற நம்பிகளது இத்தலத் தேவாரங்
குறித்தபடியாம்.

“நாகர் நாடு மீமிசை மிதந்து
மீமிசை யுலகங் கீழ்முதற் றாழ்ந்திங்
கொன்றா வந்த குன்றா வெள்ளம்“

-பதினொராம் திருமுறை - பட்டினத்தடிகள் திருக்கழுமல
                                மும்மணிக்கோவை 1

என்றபடி பெருவெள்ளமாதலின் தெண்டிரை வேலையின் என்றார்.

     கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்றிருந்தபடி - இது
நம்பிகளது தேவாரப் பதிகத்தின் கருத்து. “கழுமல வளநகர்க் கண்டு
கொண்டேனே“ என்ற பதிகத்து மகுடம் காண்க. கயிலையில்
நாயகன் தமக்குச் செய்த பேரருட்டிறங்களையும் அவனது அருளின்
பொதுத்தன்மைகளையும் கூறி அவன் கயிலையில்
வீற்றிருந்தவண்ணமாக இங்குத் திருத்தோணிபுரத்தாரைக்
கண்டுகொண்டேன் என்பது பதிகக் கருத்தாம். வீற்றிருந்தபடியாகத்
தோணிபுரத்தாரைக் கண்டு கொண்டேன் என்க. கண்டு
கொண்டேன
- கண்களாற் கண்டு மனத்திலே தரிக்க
வைத்துக்கொண்டேன். “வேண்டிக்கொள்வேன் தவநெறியே“ என்பது
போல. (பக்கம் 260)

     பண்தரும் இன் இசை பயின்ற திருப்பதிகம் - பண் -
இசை - பதிகம் முதலியவற்றின் இலக்கணங்களை வரிசை 221-ம்
திருப்பாட்டின் கீழ்க் காண்க. பண்ணின் நீர்மையைத் தருகின்ற
இனிய இசை மிக்கு விரவிய திருப்பதிகம். பயிலுதல் - இங்கு மிக்கு
விரவுதல் என்ற பொருளில் வந்தது. முன்னர்ச் சொல்லிய இலக்கணம்
முழுதும் நிரம்பிய திருப்பதிகம் என்றபடி.

     நகர்க் கண்டுகொண்டேன் - நகரைக் காணவே, அந்த
நகரத்துக் காட்சியிலே வெளியிலே அவனைக் கண்டேன் என்க.
நகர்க் கண்டேன் என்றதனால் உள்ளே சென்று திருக்கோயிலுள்ளே
தரிசிக்கவில்லை என்பதும், நகரின் புறத்தே எதிர் காட்சி காட்டக்
கண்டார் என்பதும் அறியக் கிடக்கின்றன. இது சரிதக் குறிப்பாகிய
அகச்சான்று என்க.

பதிகம
(பண் - தக்கேசி)
திருக்கழுமலம்

திருச்சிற்றம்பலம்

சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத்
     தன்னரு டந்தவெந் தலைவனை மலையின்
மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை
     வருபுனல் சடையிடை வைத்தவெம் மானை
யேதிலென் மனத்துக்கோரிரும்புண்ட நீரை
     யெண்வகை யொருவனை யெங்கள்பி ரானைக்
காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
     கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
(1)
   
செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும்
     விரவிய சடைமுடி யடிகளை நினைந்திட்
டழுமலர்க் கண்ணிணை யடியவர்க் கல்லா
     லறிவரி தவன்றிரு வடியிணை யிரண்டுங்
கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன்
     சடையன்றன் காதலன் பாடிய பத்துந்
தொழுமல ரெடுத்தகை யடியவர் தம்மைத்
     துன்பமு மிடும்பையுஞ் சூழ்கி லாவே.

(10)

                      திருச்சிற்றம்பலம்

     பதிகக் குறிப்பு: - மேலே கயிலையில் வீற்றிருந்தபடி
திருத்தோணிபுரத்தாரை நகர்ப்புறத்தே கண்டுகொண்டேன் என்பது.
முன்னர் உரைத்தது காண்க. “அவன் திருவடி யிரண்டுங் கழுமல
வளநகர்க் கண்டுகொண்டூரன் சடையன்றன் காதலன் பாடிய“ என்ற
திருக்கடைக் காப்பு இச்சரித நிகழ்ச்சியையும் பதிகக் குறிப்பையும்
தெளிவுறக் காட்டுதல் காண்க.

     பதிகப் பாட்டுக் குறிப்பு: - (1) சாதலும் பிறத்தலும்
தவிர்த்து
- இவ்வுலகத்து இறப்பும் பிறப்பும் இனி இல்லையாம்படிச்
செய்து. பிறந்தார் இறத்தலும், அதன்பின் பிறத்தலும் இயல்பாதலின்
இம்முறை வைத்தார். “தோற்றமுண்டேல் மரணமுண்டு“ நம்பிகள்
தேவாரம். “மரணம் பிறப்பு என்று“, “சாதல் பிறப்பென்னுந்
தடஞ்சுழி“ என்ற திருவாசகங்கள் காண்க. உலக வாழ்வின்
மேல்வினை விளையாமல் கயிலையில் வரம் பெற்றார் நம்பிகள்
ஆதலின் பிறத்தல் தவிர்த்து என்றார். யோக நெறியால் சாதல்
இல்லையாம். “துஞ்சுதல் மாற்றுவித்து“ (கொடித்தான்மலை - 6)
நம்பிகள் தேவாரம். “களையா வுடலோடு சேரமான் ஆரூரன்“
(திருவிசைப்பா) “மானவ யாக்கையொடு“ (11-ந் திருமுறை). ஏதிலென்
மனத்துக்கு ஓர் இரும்புண்ட நீரை: -
என் மனதுக்கு இரும்பினால்
உண்ணப்பட்ட நீரின் தன்மை கொடுத்தவனை. தனது தன்மையினால்
என் தன்மையைப் போக்கிச் சுவறச் செய்தவன். இரும்பு - காய்ச்சிய
இரும்பு. “பார்த்த பார்வையா விரும்புண்ட நீரெனப் பருகும்
தீர்த்தன்“ திருவிளை - புரா - “இரும்புண்ட நீர்“ - பழமொழி. (2)
மற்றொரு துணை - தொழப்பட்ட சுடரையன்றி வேறொரு துணை.
மறுமைக்கும் - இம்மையிலேயன்றி மறுமையிலும். மறவாவரம் -
கயிலையில் கேட்ட வரமும், எத்தான் மறவாதே - என முதலிற்
பாடிப் பெற்றதும், தவநெறி வேண்டிப் பெற்றதும் முதலியன.
கற்பனை - பலபல நெறிகளினின்றும் முறை யாய்க் கற்றுக்கொள்ளும்
படிப்பினை. முறைமுறை - படிப்படியாக. (3) கனவிடை விரவி
விழித்து எங்கும் காணாது - அவன் நினைவாகவே யிருத்தலின்
கனவிற்கண்
டேன் - விழித்துக் கனவிழந்து வருந்தினேன்.
அகப்பொருட்டுறை - (4) மழைக்கு அரும்பும் - கார்காலத்துப்
பூக்கும். பிழைத்து ஒருகால் இனிப்போய்ப் பிறவாமை பெற்றேன் -
முன் கயிலையிற் பிழைசெய்து இப்பிறவிபெற்றதுபோல இதிலும்
பிழைசெய்து மீண்டும் பிறவாமல் தடுத்தாட்கொள்ளப்பெற்ற பெருமை.
இதில் நம்பிகள் முன் சரிதக் குறிப்புக் காண்க. பெற்றதார் பெறுவார்
- அருளிலே திளைத்தல். “ஆர்பெறுவா ரச்சோவே“ - திருவாசகம்.
“ஆரும் பெறாத வறிவுபெற்றேன்“ - திருவிசைப்பா. (5) விதியாலே -
பண்டைவிதியால் - ஆகமங்களின் விதித்தபடி. (7)
பரவவும்...தொழவும் - கண்டு நான் அவ்வாறு செய்யாமல். “முயல்
வலை யானை படும்“ - பழமொழி. முயல்பிடிக்க விரித்த வலை
ஒருக்கால் யானையையும் கட்டும். சாயலுள் அடைதல் - அவர்
சாயலுள் என் சாயல் அடங்கும்படிப் பின்பற்றுதல். முயல் -
முதனிலைத் தொழிற்பெயராய் முயற்சியையும் குறிக்கும். புயல் -
உலக நிலைபேற்றுக்குக் காரணம். திரு - நிலைபேற்றினால்
உளதாகும் பொருள். பொன் - ஒளி; மின் - உருமின் ஒளி
காணமுடியாது; ஆதலின் உருவ மட்டும் மின்போலவும் ஒளி
பொன்போலவும் உள்ள பொருள் - சிவபூசையில் அந்தரியாகப் பூசை
வரலாற்றுட் காண்க. “புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னும்“
(திருமந்திரம் - 9). மறையிடைத் துணிந்தவர் - வேதங்கள்
துணிந்து வைத்த பொருள். மனையிடை - உயிருக்குள் உயிராய்
உள்ளே. வஞ்சனை - உடனிருந்துங் காணாது ஒளித்திருத்தல் -
மாயத்துறை உலக வாழ்வு. உளதாக - உண்மை எனவே கொண்டு.
[இப்பாட்டுத் திருஞானசம்பந்த சுவாமிகள் சரிதத்தைக் குறிப்பதெனக்
கூறுவாருமுண்டு] (10) அழுமவர்க்கல்லால் அரிவரிதாகிய அவன்
திருவடியிரண்டும். “அழுமவர்க் கன்பர்போலும்“ (அப்பர் தேவாரம்.)
துன்பமும் அதற்குக் காரணமாகிய இடும்பையும். பத்தும்பாடி மலர்
எடுத்துத் தொழும் கை அடியவர் என்க.

     தலவிசேடம் :- திருஞான சம்பந்த சுவாமிகள் புராணத்துட்
காண்க. சீகாழி என்ற நிலயத்திலிருந்து தென்கிழக்கில் 3/4 நாழிகை
யளவில் அடையலாம்.   113