26. அங்க ணோரொளி யாயிர ஞாயிறு
 
  பொங்கு பேரொளி போன்றுமுன் றோன்றிடத்
துங்க மாதவர் சூழ்ந்திரந் தாரெலாம்
‘இங்கி தென்கொ லதிசயம்?’ என்றலும்,
16

     (இ-ள்.) அங்கண் ......... தோன்றிட - அவ்விடத்தே ஒரு பெரிய ஒளியானது ஆயிரம் சூரியர்கள் ஒருங்கே தோன்றி வளரும்
பெரிய ஒளிபோல் முன்னால் தோன்றவே; துங்க மாதவர் ... எலாம்
- தூய தவமுனிவர்கள் சூழ இருந்தார்கள் எல்லாரும்; இங்கு ...
அதிசயம்? என்றலும் - இங்கே இது தோன்றுவது என்ன அதிசயம்?
என்று வினாவுதலும்;

     (வி-ரை.) அங்கண் ஒர் ஒளி ஆயிர ஞாயிறு பொங்கு பேரொளி போன்று முன்தோன்றிட - அவ்விடத்து அவர்கள்
முன்பாக ஒரு பெரிய ஒளி தோன்றிற்று - அஃது ஆயிர ஞாயிறுகள்
சேர்ந்து மேல்மேல் வளர்ந்து பெருகிய ஒளிபோன்றிருந்தது என்க.
துங்க மாதவர் - துங்கம் - தூய்மை. மேற்பாட்டிலேகூறிய முனிவர்
யோகிகள் என்ற இருவகையும் தவத்தால் கிடைக்கின்றன ஆதலின்
மாதவர் என ஒன்றுசேர்த்துக் கூறினார். துங்கம் - பெருமையுமாம்.

     அதிசயம் - இன்னதென்று தெரிந்து அனுபவிக்கப் பெறும் பெருமித உணர்ச்சியை அதிசயம் என்பர். பெருமித உணர்ச்சி மட்டும்
உண்டாகி இன்னதென்று அறியப்படாதது - அற்புதம் என்க. இதனை
அதிசயம் கண்டாமே” என்றும் “அற்புதம் அறியேனே” என்றும்
ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் அதிசயப்பத்து - அற்புதப்பத்து என்ற
திருவாசகப் பகுதிகளிற் கூறியருளினார். இதன் விரிவை எனது
நீத்தார் பெருமை” என்ற நூலிற் காண்க.

     இங்கிதென் கொல் அதிசயம் என்றலும் - இங்கு யாங்கண்ட
அதிசயம் இது என்கொல் என்றனர்; என்று வினவுதலும் - பேர்
ஒளிப் பொருள்கள் பலவற்றினுள்ளே அவற்றைக் கவரும் மற்றும்
ஒரு பேரொளி காணப்படுதலே அதிசயம் எனப்படும் என்னை? (1)
தூயமால் வரைச் சோதி எனவும், “மெய்யொளி தழைக்கும்
தூய்மை
” எனவும், மேலே கூறியபடி பேரொளி யுடையது
இத்திருமலை.

(2) அது, “... ... ... ... ...

சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகமொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்

ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகும் கடந்தண்டத் தப்பால் நின்ற
பேரொளியை” - என்ற சிவமாகிய பேரொளியைத்
                            தாங்கி நிற்கும்.

(3) இக்கயிலைத் தாழ்வரையிலே ஞான ஒளியுடன் விளங்கும் யோகிகள் முனிவர்களிடையே அவர்களது மனங்கவரும் சத்தியுடன்
மற்றும் ஒரு பேரொளி தோன்றிற்றாதலின் இது அதிசயமாயிற்று
என்க. தட்சிண கயிலாயமாகிய திருக்காளத்தி மலையிலேயும்
“ஐந்துமா றடக்கி யுள்ளார் அரும்பெரும் சோதியாலும், எந்தையார்
திருக்காளத்தி மலையினி விரவொன் றில்லை” என்று பின்னர்க்
கூறுவதும் இங்கே சிந்திக்கத்தக்கதாம்.

     இறைவனே உலகத்திற்கு விளக்கத்தைச் செய்து காட்டும்
கருத்தனாதலின் பேர் ஒளி எனப் பெறுவன். “மாயிருள் ஞால
மறுவின்றி விளங்கப் - பல்கதிர் விரிந்தன் றொருமுகம்” என்பது
திருமுருகாற்றுப்படை.

     ஆயிரம் ஞாயிறு - ஆயிரம் என்றது எண்ணிறந்த -
அனேகம் - எனும் பொருளில் வந்தது.

     "ஆயிரம் ஞாயிறு பொங்கு பேரொளி" என்பது சிவபெருமானது பேரொளியாகிய சிவவொளி; சிவனது பிரகாசம்
என்க. “ஆயிர ஞாயிறு போலும் ஆயிர நீண்முடியானும்” என்பது
அப்பர் சுவாமிகள் தேவாரம். சுந்தரமூர்த்திகள் சிவபெருமானது
பேரொளியைப் பெற்றவர் என்பது இங்குக் குறிக்கப்பெற்றது
சிவபெருமான் ஒரு காலத்திலே தமது திருவுருவைக் கண்ணாடியிற்
பார்த்து அதில் தோன்றிய உருவத்தை வா என்று அழைக்க,
அதுவே சுந்தரராக வந்தது - என்னும் வரலாறும் இங்கே
குறிக்கத்தக்கதாம். இதுபற்றி,

“கயிலை நாயகன் காமரு தன்னுருப்
பயிலும் ஆடியிற் பார்த்தங் கழைத்தலும்
வெயில்செய் வெங்கதிர் கோடி விராய்எனச்
செயிரி லாதமெய்த் தேசொடும் தோன்றினார்”

     எனும் பேரூர்ப்புராணம் பள்ளுப்படலம் (1) பாட்டும் காண்க.
அப்பாட்டிலும் “வெங் கதிர்கோடி”எனவும், “மெய்த்தேசு” எனவும்
குறித்தல் காண்க.     16