262.
|
வம்புலா
மலரலைய மணிகொழித்து வந்திழியும் |
|
|
பைம்பொன்வார்
கரைப்பொன்னிப் பயிறீர்த்தம்
படிந்தாடித்
தம்பிரான் மயிலாடு துறைவணங்கித் தாவில்சீ
ரம்பர்மா காளத்தி னமர்ந்தபிரா னடிபணிந்தார். |
116 |
(இ-ள்.)
வெளிப்படை. மலர்களையும் மணிகளையும் கொண்டு
வழியிலே இருகரையிலும் பொன்பரப்பிச் செல்லும் காவிரியின்
தீர்த்தத்திலே (நம்பிகள்) தோய்ந்து
குளித்து இறைவன் எழுந்தருளிய
திருமயிலாடுதுறையை வணங்கிக் கொண்டுசென்று திருவம்பர் மாகாளத்தினையடைந்து இறைவனது திருவடிகளை
வணங்கினார்.
நம்பிகள் என்ற எழுவாய் வருவித்துரைக்க.
(வி-ரை.)
வம்பு உலாம் மலர் - மணந் தங்கிய புதிய
பூக்கள்.
மலர் அலைய மணி கொழித்து
வந்து இழியும் - மலர்
அலைய இழியும் என்றும், மணிகொழித்து வந்து இழியும் என்றும்
பிரித்துக் கூட்டி யுரைக்க. மலர்கள் இலகுவான பொருள்களாதலின்
நீர்ப் பெருக்கின் மேலே அலைகளால் அலைப் புண்டு வருவதால்
மலர் அலைய என்றார். மணிகள் அவ்வாறன்றிக் கனத்த
பொருள்களாதலின் நீர் ஓட்டத்தின் வேகத்தாற் கீழ்ப்புறத்தே
அவ்வவற்றின் கனத்துக்குத் தக்கவாறு தனித்தனிப் பிரித்து மெல்லக்
கொண்டுவரப் பெறுதலின் கொழித்து வந்து என்றார்.
பைம்பொன்வார் கரைப்பொன்னி
- பொற்சன்னமாகிய
தூள்களை ஒதுக்கும் இருகரைகளையுடைய காவிரி. பொன்னி என்ற
போர்க்காரணம் குறித்து அப்பெயராற் கூறியவாறு. முன்னரும்
(வரிசை - 57) செம்பொன் வார்கரை ... ஈர்ம்பொன்னி என்றமை
காண்க.
பயில் தீர்த்தம்
- சிவபெருமானை வழிபட்டுப் பயிலும்
தீர்த்தம். வம்புலாமலர் நீரால் வழிபட்டு எண்ணில் சிவாலயத்து
எம்பிரானை இறைஞ்சிச் (வரிசை - 57) செல்லுதலாலே தான்
சிவார்ச்சனையிற் பயில்வதன்றித், தனது நீரினாலே அடியார்களுக்கு
உதவி, அவர்களையும் சிவவழிபாட்டுற் பயிலச் செய்கின்ற தீர்த்தம்
என்றலும் பொருந்தும். இப்பொருட்குப் பயில் என்பதனைப்
பயில்விக்கும் என்று பிறவினையாகக் கொள்க. இவ்வாறன்றிப்
பூந்தண் பொன்னி யெந்நாளும் பொய்யாதளிக்கும் புனனாட்டு
(சண்டீசர் - புரா - 1) என்றபடி, என்றும் மாறாமல் பயிலும் நீர்
என்றும், உலகத்தை ஊட்டி நின்று நிலவச் செய்யும் நீர் எனவும்
உரைப்பாருமுண்டு.
படிந்தாடி
- நீருட்புகுந்து நீராடல். பூத்திகழும் பொய்கை
குடைந்து, மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்,
கையாற் குடைந்து குடைந்து (திருவெம்பாவை) எனவரும்
திருவாசகங்கள் காண்க.
மயிலாடுதுறை - தலவிசேடம்
- அம்மையார்
மயிலுருவமாய்ப் பூசித்த தலமாதலின் இப்பேர் பெற்றது.
(திருமயிலாப்பூரும் இக்காரணத்தாலே பேர் பெற்றதலமாதலும்
காண்க). இப்போது மாயவரம் என மருவி வழங்கும். மாயூரம்,
கௌரிமாயூரம் என்ற தலம் இதுவே. மாயவரம் (டவுன்)
நிலயத்திலிருந்து வடக்கே ? நாழிகையில் உள்ளது. மாயவரம்
சந்தி - நிலயத்திலிருந்து கிழக்கே கற்சாலையில் இரண்டு நாழிகை
யளவில் உள்ளது. இதன் தலவிசேட வரலாறுகள் பின்னர்க் காண்க.
பதிகம் -
நம்பிகள் இத்தலத்தும் திருஅம்பர்மாகாளத்திலும்
பாடியருளிய பதிகங்கள் கிடைத்தில. இறந்தனபோலும்.
அம்பர்மாகாளம் - தலவிசேடம்
- அம்பன் - அம்பாசுரன்
என்ற அரக்கர்களைக் கொன்ற பழி நீங்கும்படிக் காளி பூசித்த
காரணத்தால் இப்பெயர் பெற்றதென்பர். இது கோயில் மாகாளம்
எனவும் வழங்கப்பெறும். சோமாசிமாற நாயனார் யாகஞ் செய்த
தலம். இங்கு வைகாசி மாதத்தில் இத்திருவிழா மிகச் சிறப்பாய்
நடைபெறுகின்றது. விரிவு அப்புராணத்துட் காண்க. இங்கு மகாகாளர்
என்ற இருடியும் பூசித்துப் பேறுபெற்றனர் என்பர். இது அரசலாறு
என வழங்கும் அரிசொல் ஆற்றின் கரையில் உள்ளது. இந்த யாறு,
அரி (விட்டுணு) சொற்படி அவர் பூசை செய்தற்காகக்
காவிரியினின்றும் பிரிந்து வந்த ஒரு கிளைநதி. இத்தலம் பேரளம் -
திருவாரூர் இருப்புப்பாதை வழியில் பூந்தோட்டம் என்ற
நிலயத்திலிருந்து கிழக்கே மட்சாலை வழி 1? நாழிகை யளவில்
அடையத்தக்கது. இதன் கிழக்கே ? நாழிகை தூரத்தில் திருஅம்பர்ப்
பெருந் திருக்கோயில் என்ற மாடக்கோயில் உள்ளது.
மலர்மாலை - அம்பொன் மாகாளத்தின் - என்பனவும்
பாடல்கள். 116
|
|
|
|