268. மங்கலகீ தம்பாட மழைநிகர்தூரியமுழங்கச்  
  செங்கயற்கண் முற்றிழையார் தெற்றிதொறு
                              நடம்பயில
நங்கள்பிரான் றிருவாரூர் நகர்வாழ்வார்
                            நம்பியைமுன்
பொங்கெயினீ டிருவாயிற் புறமுறவந்
                        தெதிர்கொண்டார்.
122

     (இ-ள்.) வெளிப்படை, மங்கல கீதங்கள் பாட, தூரியங்கள்
முழங்க, ஆடற் பெண்கள் நடம் பயில, திருவாரூர் வாழும்
அடியவர்கள் மதிற்புற வாயிலில் வந்து நம்பிகளை எதிர் கொண்டு
வரவேற்றார்கள்.

     (வி-ரை.) பாடுவோரைக் கீதம் பாடச் செய்தும்,
முழக்குவோரைத் தூரியம் முழக்கச் செய்தும், ஆடற் பெண்களை
நடம்பயிலச் செய்தும் ஆரூர் வாழ்வார் நகரின் மதிற்புற வாயிலில்
நம்பிகளை எதிர்கொண்டார் என்க. பாடுவோர் - முழக்குவோர்கள் -
வருவித்துரைக்க.

     பாட - முழங்க - பயில - என்பவற்றை மேற்பாட்டுக்களிலே
கொண்டதற்கேற்ப இவற்றைப் பாடுவித்து - முழக்குவித்து -
பயில்வித்து எனப் பிறவினைப் பொருளாகக் கொள்க. இங்ஙனமின்றி
நகர்ச் சிறப்பியல்பாலே அவை அவை தத்தம்படியாகவே பாட -
முழங்க - பயில - வாழ்வார் எதிர்கொண்டார் என்றுரைப்பினுமாம்.
வரிசை 87, 88, 89 பாட்டுக்கள் காண்க.

     மழை நிகர் தூரியம் - மேக கர்ச்சனைபோன்று முழங்கும்
பேரிகைகள். மழை அதற்குக் காரணமான மேகத்தைக் குறித்ததாகிப்,
பின் அதன் முழக்குக்கு ஆயிற்று. இருமடியாகுபெயர்.

     செங்கயற்கண் முற்று இழையார் - சிவந்த கயல்மீன்
போன்ற கண்ணுடையராய் முழுதும் வேலைப்பாடமைந்த அணிபூண்ட
ஆடற்பெண்கள். இழையார் என்ற பொதுப்பெயர் நடம்பயில என்ற
இடம் நோக்கி ஆடற்பெண்களைக் குறித்தது.

     நடம் பயில - பாடலுக்கும் தூரிய முழக்கிற்கும் பொருந்தும்
வகையில் நடம் ஆட.

“காந்தார மிசைபரப்பிக் காரிகையார் பண்பாடக் கவினார்
                                          வீதித்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவை
                                          யாறே“

என்ற தேவாரத்தினை இங்கு வைத்துக் காண்க.

     முன் - முன்னே வந்து. நம்பிகள் வருவதற்கு முன்பே
வாயிற்புறம் வந்து.

     வாயிற்புறம் வந்து - இது தலத்தின் வெளித் திருவாயில்.
மேலே வரிசை 266-ம் பாட்டிற் குறித்த உயர் வாயில்களிலிருந்து
பிரித்துணர்த்துதற்குப் “பொங்கெயில்நீள் திருவாயில்“ என்று
அடைகொடுத்துக் கூறினார். 122