270. வானுற நீடிரு வாயி னோக்கி மண்ணுற
                 வைந்துறுப் பால்வ ணங்கித்
 
  தேனுறை கற்பக வாச மாலைத் தேவா சிரியன்
                         றொழுகி றைஞ்சி
யூனு முயிரு முருக்கு மன்பா லுச்சி குவித்தசெங்
                           கைக ளோடுந்
தூநறுங் கொன்றையன் மூலட்டானஞ் சூழ்திரு
                   மாளிகை வாயில் புக்கார்.
124

     (இ-ள்.) வெளிப்படை. நீண்ட திருவாயிலை நோக்கிக்
கீழ்வீழ்ந்து வணங்கித் தேவாசிரியனைத் தொழுது இறைஞ்சி,
அன்பினாலே உச்சியிற் கைகள் கூப்பி இறைவன் எழுந்தருளிய
திருமூலட்டானத்தைச் சூழ்ந்த திருமாளிகை வாயினுட் புகுந்தார்.

     (வி-ரை.) வானுற நீள்திருவாயில் - பூங்கோயிலின்
திருவாயில். மேலே சொல்லிய “உயர் வாயில்“ (266),
“நீள்திருவாயில்“ (268) என்பவை வேறு. இதனை வான் உற நீள்
திரு என்ற அடைமொழிகளாற் பிரித்துக் காட்டியவாறு. முன்
குறித்தவற்றின் அடைமொழிகளை நோக்குக. வானுற - மண்ணுற
என்ற சொற்சுவையும் சிறப்பும் காண்க. நோக்கி - தரிசித்து.
ஐந்துறுப்பால் வணங்கி - ஐந்து உறுப்பாவன - தலையும்
கைகளிரண்டும் கால்களிரண்டுமாம். இவை நிலத்திற் பொருந்த
வணங்குதல் பஞ்சாங்க நமஸ்காரம் என்பர். வாயில் -
தூலலிங்கமாகிய கோபுரத்தின் கீழ் அமைந்து, திருக்கோயிலின்
முகமாதலின் அதனை வணங்குதல் முறைமையாம்.

     தேனுறை கற்பக வாச மாலைத் தேவாசிரியன்
- மாலை
வாசம் என்று மாற்றுக. கற்பகமாலை வாசம் கமழும் என்க. மாலை
என்பதனைத் தேவாசிரியன் என்றதில் உள்ள தேவர்களுக்கு
அடையாக்கிக் கற்பகப் புதுப்பூ அணிந்த தேவர்கள் காத்திருக்கும்
மண்டபம் என்றலுமாம். கற்பகப் பூமாலைகள் தூக்கியிருக்கும்
தேவாசிரிய மண்டபம் என்றுரைப்பாரு முண்டு. தொழுது இறைஞ்சி -
முதலிலே கைகள் கூப்பி அஞ்சலி செய்து பின்னர், எட்டுறுப்பு -
ஐந்துறுப்புக்களும் நிலத்திற் பொருந்த வணங்கி.

     ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் - அன்பு ஊனையும்
உயிரையும் உருக்க வல்லது. இதனைத் தொடர்புடையார் மாட்டு
நிகழ்வதோர் உள்ள நிகழ்ச்சி என்பர். உள்ளத்தே நிகழ்வது
உடம்பைப் பற்றும்; கண்ணீர் வார்தல் முதலிய மெய்ப்பாடுகளை
விளைக்கும்; உடம்போடு நில்லாது உயிரையும் பற்றும். “ஊனையு
மென்பினையு முருக்கா நின்ற ஒண்மையனே“, “என்பே யுருக ...
எனை யுருக்கி“ எனவரும் திருவாசகங்கள் காண்க.

     கொன்றையன் - சிவபெருமான். கொன்றை
சிவபெருமானுக்குச் சிறப்பாய் உரியபூ. “இதழியுமுடன் கூறினார் -
திருவடையாளமாலையாதலின்“ என்று மாதவச் சிவஞான முனிவர்
சிவஞான சித்தியாருரையிற் கூறியது காண்க. பிரணவ
உருவமாயமைந்து, சிவபிரானே பிரணவவாச்சியம் என்றறிவிப்பது.

     திருமுலட்டானம் - புற்றிடங்கொண்டார்
எழுந்தருளியிருக்கும் இடம். (கோயில்) திருமூலட்டானம் என்பது
திருத்தில்லையிலும் திருவாரூரிலும் உள்ள விசேடத் தலங்கள்.
தில்லையில் நடராசர் எழுந்தருளிய சபைக்கு வடபால் வேறாகத்
திருமூலநாதர் எழுந்தருளி யிருக்கும் திருமூலட்டானம் போல,
இங்குத் தியாகேசர் எழுந்தருளியிருக்கும் இடம் வேறு;
புற்றிடங்கொண்டார் எழுந்தருளியிருக்கும் திருமூலட்டானம் வேறு.

     சூழ் திருமாளிகை - திருமூலட்டானத்தைச் சுற்றி உள்ள
மண்டபம். திருமாளிகைப் பத்தி என்பர். திருமாளிகை வாயில் - இது
முன் சொன்ன வான் உற நீள் திருவாயிலின் வேறு. 124