282. பிள்ளைமைப் பருவ மீதாரம் பேதைமைப் பருவ                                   நீங்கி  
  யள்ளுதற் கமைந்த பொற்பா லநங்கன்மெய்த்
                           தனங்க ளீட்டங்
கொள்ளமிக் குயர்வ போன்று கொங்கைகோங்
                          கரும்பை வீழ்ப்ப
வுள்ளமெய்த் தன்மை முன்னை யுண்மையுந்
                       தோன்ற வுய்ப்பார்.
136

     (இ-ள்.) பிள்ளைமை ... நீங்கி - மேலே சொல்லிய பிள்ளைப்
பருவமாகிய ஐந்தாண்டுவரை உள்ள பருவத்தின்மேல் வருவதாகிய
பேதைப் பருவமுங் கடந்து; அள்ளுதற்கு ..... வீழ்ப்ப - அள்ளி
எடுத்துக் கொள்ளும் விருப்பத்தையுண்டாக்கும் அழகினுடன்
மன்மதனுடைய மெய்யாகிய தனங்களின் குவியலை ஏற்றுக்
கொள்ளும் பொருட்டு மிகவும் உயர்ந்து வளர்வன போலத் தனங்கள்
கோங்கு அரும்புகளை வெல்லும்படியாக வளரவும்; (உடல் வளர்ச்சி
இவ்வாறாக); உள்ளம் .... தோன்ற - மனத்தினது உண்மை
யியல்பானது முன்னே தாம் அம்மையாரின் சேடியராயிருந்த
உண்மையும் குறிப்பாய் ஓரோர்கால் தோன்றவும்; உய்ப்பார்
- வாழ்வார்.

     (வி-ரை.) 279-ம் பாட்டில் ஓராண்டு வரை உள்ள
வளர்ச்சி கூறினார். 280-ல் அதன்மேல் 5 ஆண்டுவரை வளர்ச்சி
கூறப்பெற்றது. 281, 282 பாட்டுக்களிற் பிள்ளை, பேதை என்ற
பருவங்களைச் சொல்லிய ஆசிரியர், இனி, இவற்றிற்கு மேலுள்ள
பேதை, பெதும்பை, மங்கை பருவங்களை 282-ம் பாட்டிற்
கூறுகின்றார். பேதை - அறியாத பருவம்; பெதும்பை - அறிந்தும்
அறியாமலும் உள்ளது; மங்கை - அறிந்தது; மடந்தை - அறிந்து
நாயகன்மேற் காதல் கொண்டது; அரிவை - நாயகனிடத்து இன்பந்
துய்ப்பது; தெரிவை - இன்பம் பெருகுவது; பேரிளம்பெண் - மீள
முதல் நிலையடைந்தது போன்று முற்றிய இளம் பெண் - இந்த
இன்பத்திற் பயன்படாமையின் இளம் பெண் என்பர்.
இப்பருவங்களின் இயல்புகளைத் திருக்கைலாய ஆதி
ஞானவுலாவிலும், உலா இலக்கணங்களிலும் காண்க. பருவங்களின்
இயல்பு மேலே குறிக்கப்பட்டதாம்.

     அள்ளுதற் கமைத்த பொற்பு - அள்ளி எடுத்துக்
கொள்ள அமைந்தது போன்ற அழகு. மெய் - உடம்பிலே
என்றுரைப்பாருமுண்டு.

“அள்ளிக் கொள்வன்ன குறுமுகிழ வாயினுங்
கள்ளிமேற் கைநீட்டார் சூடும்பூ வன்மையால்“
                                 -(பழம்பாட்டு)

      “அழகிய பிரானோ என்னா அள்ளிமுத்தங் கொண்டு“
என்ற திருவிளையாடற் புராணங் (இரசவாதம் செய்த படலம் 29.)
காண்க.

     அநங்கன் மெய்த்தனங்கள் ஈட்டம் கொள்ள மிக்குயர்தல்
- மன்மதன் தேடும் மெய்த்தனங்களை ஈட்டிப் பெருக்க வைத்தலால்.
அவற்றைச் சேமித்து வைக்கும்கொள்கலமாகிய பாத்திரமும் வளர
வேண்டியதுபோல. தனங்கள் ஈட்டம் கொள்ளவே இவையும் ஈட்டம்
கொண்டுயர்தல் வேண்டுமென்ற இயல்பு குறித்ததாம். தனங்கள் -
ஈட்டம் (பெருக்கு) கொள்ளும் என்ற சொற்பொருட் சுவை
பெறப்படுதல் காண்க. மன்மதன் தேடிய உண்மையான திரவியக்
குவையைப் பெற்றுக் கொள்ள உயர்ந்த தனங்கள் என்பது
மகாலிங்கையர் உரை. இளம்பருவம் தனுத் தொழில் கற்ற காமன்
அக்கல்வியின் பயனாய் ஈட்டியபொருள் என்ற குறிப்பும் காண்க.

     கோங்கு அரும்பை வீழ்ப்ப - முன்னே அரும்போ என்று
சொல்லும்படி ஒரு புடை ஒப்பாயிருந்தன; இப்போது உயர்ந்த
தன்மையால் அதனை வென்றன என்பது கருத்து பிறவற்றை
விடுத்துக் கொங்கைகளைக் குறித்தது பெண் தன்மைக்குரிய
அங்கங்களிற் றலைமை யாதல் பற்றி, அது பற்றியே கோங்குக்கு
அடைமொழி கொடாமலே கூறியதுமாம்.

     உள்ள மெய்த்தன்மை - பொருந்திய மற்ற
உடற்பகுதிகளிலேயும் வளர்ச்சித் தன்மை என்றுரைத்தலுமாம். அதில்
முன்னை உண்மையும் தோன்றுவதாவது மேலே கொங்கைக்குக்
கூறியது போன்ற இயல்பையே கொண்டது என்றபடி. இதற்கு மனம்
பரிசுத்தமாயிருக்கும் தன்மை என்றும், முன்னை உண்மையும் தோன்ற
- என்பதற்கு உண்மைத் தோழியா யிருந்த தன்மையும் யாவர்க்கும்
தோன்றும்படி என்றும் உரை கூறுவர் மகாலிங்கையர்.

     உய்ப்பார் - செலுத்துவாராயினர் - வாழ்நாளைக் கொண்டு
செலுத்தினார். “கண்ணுதலைத் தொழுமன்பே கைக்கொண்டு
செலவுய்ப்ப“ என்றதும் காண்க.

     உயர்வுபோன்ற - என்பதும் பாடம். 136