295. என்றினைய பலவுநினைந் தெம்பெருமா
                          னருள்வகையான்
 
  முன்றொடர்ந்து வருங்காதன் முறைமையினாற்
                           றொடக்குண்டு 
“நன்றெனையாட் கொண்டவர்பா
            னண்ணுவ“னென் றுண்மகிழ்ந்து  
சென்றுடைய நம்பியும்போய்த் தேவர்பிரான்
                             கோயில்புக,
149

     (இ-ள்.) வெளிப்படை மேலே குறித்தபடி பாராட்டி
இவைபோன்ற பல எண்ணங்களையும் நினைந்தவராய், எமது
இறைவன் அருளிய வழியினாலே, முன்னிருந்தே தொடர்ச்சியாய்
வரும் காதலாகிய தொல் விகுதியினாலே கட்டுப்பட்டவராய்,
“நன்றாக என்னை ஆளாகக் கொண்ட இறைவனிடத்தே சென்று
சேர்வேன்“ என்ற கருத்துடனே, உள்ளத்திலே மகிழ்ச்சியுடன்
செல்வாராய் ஆளுடைய நம்பிகளும் போய்த் தேவதேவனாகிய
இறைவனது திருக்கோயில் புகுதலும்;

     (வி-ரை.)அருள்வகையால் முன் தொடர்ந்து வரும் காதல்
முறைமை - திருமலைச் சருக்கத்திற் கூறியவாறு திருக்கயிலாயத்தின்
நிகழ்ச்சியினாலே சிவபெருமானது ஆணை வழியே தொடர்புபற்றி
வருவது என்றபடி. நம்பி தொடக்குண்டமை அருள்பற்றிய தொடர்பே
யன்றிப் பிற ஆன்மாக்கள்போலப் பிறவித் தொடக்கல்ல என்று
அவரது தன்மை உணர்த்தியவாறு.

      நினைந்து - தொடக்குண்டு - உண்மகிழ்ந்து - சென்று
போய்ப்புக - என்று கூட்டி முடிக்க.

      தொடக்குண்டார்க்கு வருந்தலே முறையாயினும் தம்மை
ஆட்கொண்ட பெரியானை நினைக்கவே அது மகிழ்ச்சி
உண்டாக்கியது என்பார் உண்மகிழ்ந்து என்றார்.

      நன்று எனை ஆட்கொண்டவர் - நன்றாக - எனது
நன்மையின் பொருட்டே - என்னைத் திருவெண்ணெப் நல்லூரில்
ஆளாகக் கொண்டவர். ஆள்களுக்குத் தமக்கென்று செயல்
செய்துகொள்ளும் உரிமையும் வலிமையும் இல்லையாதலின் ஆளாய்க்
கொண்டவுடன் ஒரு மணம் விலக்கப்பட்டது; ஆயின் அருட்குறிப்பின்
வழி நிகழ்ந்த இவ்வேட்கையினையும் உள்ளிருந்தே அறிபவனாகிய
என்னை ஆளாகக்கொண்டவனே முற்றுவிக்க உரியவன் என்பது
குறிப்பு. ஆளுக்கு வேண்டுவனவற்றை, அவனை ஆளாக்
கொண்டவனே செய்தல் வேண்டும் என்ற முறையைக் குறிக்க
எனையாட்கொண்டவர் பால் நண்ணுவன் என்றார்.

      உடைய நம்பி - ஆளுடைய நம்பி. பெருமானுக்கு
ஆளாந்தன்மையுடைய நம்பி (285). ஆட்கொண்டவர் என்றதற்கேற்ப
(ஆள்) உடைய நம்பி என்றார். இறைவனைத் தோழமையாகப்பெற்ற
உரிமையுடைய நம்பி என்றலுமாம் (273).

      நம்பியும் - பரவையார் புகுந்ததுபோல நம்பியும் புக.
இறந்தது தழுவிய எச்ச உம்மை. இருவருக்கும் பற்றுக்கோடு
அவ்வொருவரே என்பது குறிப்பு.  149