302. காவி நேர்வருங் கண்ணியை நண்ணுவான்  
  யாவ ரோடு முரையியம் பாதிருந்
“தாவி நல்குவ ராரூரை யாண்டவர்
பூவின் மங்கையைத் தந்“ தெனும் போழ்தினில்,
156

     (இ-ள்.) காவிநேர்வரும்.......இருந்து - கருங்குவளை மலரே
நேராக எதிராய் வருகின்றதோ என்று சொல்லத்தக்க
கண்களையுடைய பரவையாரைப் பெறுவாராகிய நம்பிகள்
ஒருவரிடமும் ஒரு பேச்சும் பேசாமல் அங்கு வீற்றிருந்து; ஆவி
நல்குவர்........போழ்தினில் - (“அமரர் நாடாளாதே“) ஆரூரைத்
தமக்குத் தலைநகராக வைத்து ஆட்சி புரிபவராகிய இறைவர்
அழகுடைய இனிய பரவையை எனக்குத் தந்து அதன்மூலம்
எனது உயிரையும் எனக்குத் தருவர்“ என்று
சொல்லிக்கொண்டிருக்கும்போதில்,

     (வி-ரை.)
காவி நேர்வருங் கண்ணி - கண்ணுக்கு நீலமலர்
உவமானமாம். ஆதலால் நேர் (ஒப்பு) பெற்று வருகின்ற. கண்ணி -
கண்களையுடையவள் (280). ‘மானிளம் பிணை'யாய் இளமையிலிருந்து
பின்னர் (286) ‘விற்குவளை'யாயினதையே நம்பிகள்
கண்டாராதலாலும், அவ்வாறு கடை பிறழுங் (288) கெண்டை
நெடுங்கண் வியப்ப உரவோனைப் பரவையாருங் கண்டார்'
ஆதலாலும், காவிபோன்று தம் எதிர் வரும்கண் என்றார். காவி -
நீலம். மன்தன் அம்புகள் ஐந்தில் கடைசியாக வருவது காவி.
வரும்கண் என்னவே முன்னை நான்கு அம்புகளும் நடுநின்ற
படைமதனன் விட்டாயிற்று என்பது குறிப்பு. “மலர்நீலங், கொல்லுமத
னம்பின் குணம்“ என்பது அதன் இலக்கணம் ஆதலின்“ என்னுயிர்
நின்றது எங்கு“ என்றும், “மங்கையைத் தந்து ஆவியையும் நல்குவர்“
என்றும் குறிப்பிட்டார் என்க.

      ஆரூரை ஆண்டவர் - “அமரர் நாடாளாதே ஆரூராண்ட“
- திருத்தாண்டகம்.

      பூவின் மங்கை - பூ - அழகிய, இன் - இனிய, மங்கை -
பரவை - மங்கைப் பருவமுடையார் என்பதும் ஆம். “அவளும்
பன்னீராட்டைப் பிராயத்தளாய்“ என்று பெண் மக்களின்
மணப்பருவம் கூறும் தமிழ் இலக்கணமும் காண்க. பதுமினி சாதிப்
பெண் என்றலுமொன்று. பூவின் மங்கை - திருமகள் போன்ற பரவை
என்று உரைப்பாருமுளர். அவ்வுரை பொருந்தாமை மேலே
காட்டினாம். 286 - 290 பாட்டுக்களின் உரை காண்க. பூவின் மங்கை
என்றதனால் முன்னம் கயிலையிற் பூக்கொய்யுங்காற் கண்ட
கமலினியாரை என்ற குறிப்புமாம். 156